அகடு படத்தை அடுத்து மகேஷ்பாபு கொரட்டலா சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் மிகவும் பிரமாண்டமாக தயாராகி வரும் இந்த படத்தில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடிக்க சோனாக்ஷி சின்ஹா, இலியானா, தமன்னா, காஜல் அகர்வால் உள்பட பல நடிகைகள் போட்டி போட்டனர். ஆனால் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடிக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பு ஸ்ருதிஹாசனுக்கு கிடைத்தது.
புனே நகரில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு 20% முடிந்துவிட்ட நிலையில் சமீபத்தில் விஜய் மற்றும் முருகதாஸுக்கு தெலுங்கு திரையுலகம் தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை ஸ்ருதிஹாசன், மகேஷ்பாபு படத்தில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார் என செய்திகள் கூறுகின்றன.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஏழாம் அறிவு திரைப்படத்தில் நடித்தபின்னர்தான் ஸ்ருதிக்கு தமிழில் வாய்ப்புகள் பெருகியது. அதேபோல தற்போது விஜய் 58 படத்தில் ஹீரோயினியாக நடித்து வருகிறார். இருவருமே தனது திரையுலக வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை கொடுத்தவர்கள் என்பதால் அவர்களுக்காக மகேஷ்பாபு படத்தை உதறி எறிந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் ஒருசில ஊடகங்களில் விஜய் 58 படத்தில் நடிக்க அதிக நாட்கள் கால்ஷீட்டை ஸ்ருதிஹாசனிடம் சிம்புதேவன் கேட்டதால் விஜய்க்காக மகேஷ்பாபு படத்தில் இருந்து விலகியதாகவும் கூறப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் சமுக வலைத்தளங்களில் பெரும் பரபரப்புடன் வெளிவந்துகொண்டிருக்கும் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பதை ஸ்ருதிஹாசன் விளக்கவேண்டும் என கோலிவுட் திரையுலகம் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றது.
Leave a Reply
You must be logged in to post a comment.