shadow

 sethu samuthra projectசேது சமுத்திர திட்டத்துக்காக ராமர் பாலத்தை இடிக்க முடியாது என மத்திய  கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பெரிய கப்பல்கள் செல்வதற்கு வசதியாக பாக் நீரிணை பகுதியில் சுமார் 80 கிலோ மீட்டர் தூரத்தில் கடலை ஆழப்படுத்தும் சேது சமுத்திர திட்டத்தை கடந்த மத்திய அரசு தொடங்கியது. இந்த திட்டத்தால் கப்பல்கள் செல்லும் நேரமும் தூரமும் குறைவடையும் என்பதற்காக இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த திட்டத்தை நிறைவேற்றினால்  கடலுக்கு அடியில் உள்ள ராமர் பாலம் என்னும் புனிதமான பகுதி இடிக்கப்படக்கூடும் என ஏராளமான இந்து அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. மேலும், இது தொடர்பான வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிற்து. இந்நிலையில் மோடி தலைமையிலான புதிய மத்திய அரசு பதவிக்கு வந்ததும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிக்கையும் தாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்து நேற்று நிதின் கட்காரி டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”இந்து மதத்தின் முக்கியத்துவம் கருதி, போக்குவரத்து மற்றும் கட்டமைப்பு துறைகளில் மாற்று வழிகள் குறித்து ஆலோசிப்பதற்காக நிறுவனம் (ரைட்ஸ்) ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. அதன்படி நாங்கள் சேது சமுத்திர திட்டத்தை ‘ரைட்ஸ்’ நிறுவனத்திடம் ஒப்படைத்தோம்.

இந்த திட்டம் தொடர்பாக அந்த நிறுவனம் அளித்துள்ள மாற்று வழிகள் அனைத்தும் பரிசீலனைக்காக மத்திய அமைச்சரவைக்கு ஒரு மாத காலத்துக்குள் அனுப்பிவைப்போம். சேது சமுத்திர திட்டத்துக்காக ராமர் பாலத்தை இடிக்கும் பேச்சுக்கே இடமில்லை. மேலும், தேசிய நீர்வழிகளை மேம்படுத்துவதற்காக ‘ஜல்மார்க் யோஜனா’ என்ற திட்டத்தை எதிர்காலத்தில் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது” என்றார்.

Leave a Reply