shadow

நான் முதல்வரானால் ஆடு மேய்ப்பவர்களுக்கு அரசு சம்பளம். சீமான்
seeman
தமிழக சட்டமன்றதேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் விதவிதமான வாக்குறுதிகளை அள்ளி கொடுத்து கொண்டு வருகின்றன. சில வாக்குறுதிகள் சீரியஸாகவும், ஒருசில வாக்குறுதிகள் காமெடியாகவும் பொதுமக்களுக்கு தோன்றுகின்றன. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், நான் முதல்வரானால் ஆடு மேய்ப்பவர்களுக்கு அரசு சம்பளம் தருவேன்’ என்று கூறியுள்ளார்.

நேற்று தேனியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி கட்சியின் கூட்டம் ஒன்றில் சீமான் பேசும்போது, ”130 கோடி தமிழன் இருந்தும், தனியாக வாழ ஒரு நாடு இல்லாமல் இருக்கிறோம். இந்த நிலைக்கு காரணம், இதுவரை நம் இனத்தின் தலைவன் ஒருவன் நம்மை ஆளாததே.

இந்தியை எதிர்ப்பதுபோல் ஆட்சியை பிடித்த தி.மு.க., இந்தியை திணித்த காங்கிரசிடமே கூட்டணி வைத்தது. கச்சத்தீவை இந்திரா தாரை வார்த்தபோது முதல்வராக இருந்த கருணாநிதி, அதை தடுக்காமல் தேர்தல் அறிக்கையில் கச்சதீவை மீட்போம் என்கிறார். அப்படியானால், இதுவரை என்ன செய்தார்? கச்சத்தீவு எப்போதும் இந்தியாவுடன் இருந்ததில்லை என சொன்ன காங்கிரஸ், உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தபோது, ”கொடுத்தது கொடுத்தது தான்” என்றது. உங்களிடம் இல்லாததை எப்படி அவர்களுக்கு கொடுப்பீர்கள்?

நான் முதல்வரானால், கச்சத்தீவை திருப்பிக்கொடு, இல்லையேல் எங்களை வெட்டிவிடு” என்பேன். நாட்டின் பிரதமாராக இருப்பவர் ‘மேக் இன் இண்டியா”, ”மேட் இன் இந்தியா,” ”டிஜிட்டல் இந்தியா”, ”கிளீன் இன் இந்தியா” என அவர் சொல்லும் எல்லாவற்றிலும் இந்தியா இருக்கிறது. ஆனால், அவர்தான் இந்தியாவில் இல்லை.

நான் முதல்வரானால் பாண்டியன்-பொன்னம்பலாரில் அணையை கட்டுவேன். எங்களுக்கு வர வேண்டிய தண்ணீரை தாருங்கள் என கேரளத்தினர் கேட்டால், முல்லை பெரியாறில் எங்களுக்கு வர வேண்டிய தண்ணீரை கொடு என்று கேட்பேன். கடந்த ஐம்பது ஆண்டுகளில் மத்திய, மாநில அமைச்சர்களின் கொள்ளையடித்த பணத்தை வாங்கி மதுரை, தேனி, மாவட்டங்களில் 500 ஏக்கரில் ஏரி அமைப்பேன். அதற்கான தண்ணீருக்கு நீர்பாதைகளை உருவாக்குவேன்.

வேளாண்மையை தேசிய தொழிலாளாகவும், கம்பு, சோளம், குதிரைவாலியை தேசியப்பயிர்களாகவும், விவசாய தொழில் செய்து அறுபது வயதை கடந்த முதியவர்களுக்கு  உதவித்தொகை வழங்குவேன். பனை மரங்களை பெருக்கும் வகையில் பல கோடி பணைதிட்டம், மண்பானை தொழிற்சாலை, நெசவு வேலையை அரசு வேலையாக்குதல், ஆடு, மாடு மேய்ப்பவர்களுக்கு அரசு சம்பளம் வழங்குவேன். ஆடு, மாடு, தேனீ வளர்க்காமல் எப்படி பொருளாதாரம் மேம்பாடு அடையும்?
 
தனியார் பள்ளி, கல்லூரி மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்களைவிட, அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வாக தரப்படும். எம்.எல்.ஏ, எம்.பி., ஆசிரியர் ஆகியோரின் குழந்தைகள் அரசுப்பள்ளிகளிலேயே படிக்க வேண்டும். அனைவருக்கும் கல்வி, மருத்துவம், குடிநீர் ஆகியவற்றை இலவசமாக கொடுத்து, தடையற்ற மின்சாரத்தை கொடுப்பேன். இன விடுதலை ஒன்றையே இலக்காக கொண்டு நாங்கள் போராடி வருகிறோம்”

இவ்வாறு சீமான் பேசினார்.

Leave a Reply