சமுத்திரக்கனியின் ‘அப்பா’வை பரிந்துரை செய்த பள்ளி தலைமை ஆசிரியர்
சமுத்திரக்கனி இயக்கும் படங்கள் அனனத்தும் ஒரு சமூக கருத்தை உள்ளடக்கி இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் இயக்கிய ‘சாட்டை’ படம் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகமாக சமுத்திரக்கனி இயக்கி, நடித்து தயாரித்த ‘அப்பா’ திரைப்படம் ஜூலை 1ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கு அனைத்து ஊடகங்களும் பாசிட்டிவ் விமர்சனங்கள் கொடுத்தது மட்டுமின்றி ஒவ்வொரு அப்பாவும் கண்டிப்பாக இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று பரிந்துரை செய்தன.
இந்நிலையில் கோபிப்பாளையம் என்ற பகுதியில் உள்ள தூய திரேசாள் பள்ளியின் தலைமை ஆசிரியர் தங்கள் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: கோபிபாளையம் ஸ்ரீவள்ளி தியேட்டரில் ‘அப்பா’ படம் ஓடுவதாகவும், ஒவ்வொரு அப்பாவும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இந்த படத்தை சலுகை கட்டணத்துடன் பார்க்க திரையரங்கு நிர்வாகிகளிடம் பேசி சலுகைக்கட்டணம் பெற்றுள்ளதாகவும் இந்த சலுகையை பயன்படுத்தி அனைத்து பெற்றோர்களூம் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒரு திரைப்படத்திற்கு ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் தனிப்பட்ட முறையில் சுற்றறிக்கை அனுப்பியிருப்பது சமுத்திரக்கனிக்கு மட்டுமின்றி படக்குழுவினர்களுக்கும் ஒரு பெருமையாக கருதப்படுகிறது. மேலும் இந்த படத்தை தேனி, கோவை உள்பட நகரங்களின் திரையரங்குகளில் பள்ளிகளில் மாணவர்களுக்காக சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.