shadow

12210cbc-8f71-4a59-8fef-934823919773_S_secvpf

ரஜினிகாந்த்- ஐஸ்வர்யா ராய் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘எந்திரன்’. இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்குமாறு இந்தி நடிகர் அமிதாப்பச்சனுக்கு இயக்குனர் சங்கர் அழைப்பு விடுத்தார். ஆனால், வில்லன் வேடத்தில் நடித்தால் ரசிகர்கள் அதனை விரும்பமாட்டார்கள் என்று ரஜினிகாந்த் சொன்னதால், அந்த முடிவை கைவிட்டதாக அமிதாப்பச்சன் சமீபத்தில் தெரிவித்தார்.

பின்னர், வில்லன் வேடத்தை ரஜினிகாந்தே ஏற்று நடித்தார். அந்த படம் வசூலை வாரிக்குவித்தது. இதைத்தொடர்ந்து, ‘எந்திரன்-2’ படத்தை சங்கர் இயக்குகிறார். இதிலும், ரஜினிகாந்தே கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். வில்லன் வேடத்தில் நடிக்க முதலில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு பேசப்பட்டார்.

அவர் குறிப்பிட்ட சில நிபந்தனைகளை விதித்ததால், அவர் ஒப்பந்தம் செய்யப்படாமலேயே விலகினார். இதைத்தொடர்ந்து, எந்திரன்-2 படத்தின் வில்லன் வேடத்தை இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகனாக திகழும் இந்தி நடிகர் அக்ஷய் குமார் ஏற்றார். அக்ஷய் குமார் மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ‘எந்திரன்-2’ படத்தில் உங்களுக்கு வில்லன் வேடத்தில் நடிக்க பயமாக இருக்கிறதா? என்று நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த அவர், ‘என்னுடைய ரசிகர்கள் மிகவும் புத்திசாலிகள்’ என்றார். இதுபற்றி மேலும், அவர் கூறியதாவது:-

தமிழ் சினிமாவில் வலுவான வேடத்தில் நடிக்கும் முதல் இந்தி நடிகர் என்ற முறையில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எந்திரன்-2 படத்தில் என்னை அணுகியதற்காக நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். வேறு ஏதாவது இந்தி நடிகர்கள் தமிழ் சினிமா பக்கம் சென்றிருக்கிறார்களா? கொஞ்சம் தென்னிந்திய சினிமாவை பாருங்கள்.

நமது கதாநாயகிகளை அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். இந்த வழக்கத்தை மாற்ற நான் விரும்பினேன். இதனால் தான் தென்னிந்திய சினிமாவுக்குள் நுழைகிறேன். மேலும், எந்திரன்-2 கதை என்னை மிகவும் கவர்ந்தது. நல்ல கதையம்சம் கொண்ட படம் அது. படம் இரண்டு மொழிகளில் தயாராகிறதா? என்பதை என்னால் இப்போதைக்கு சொல்ல முடியாது. படம் ரிலீஸ் ஆக இன்னும் ஓராண்டு இருக்கிறது. படப்பிடிப்பு ஆரம்பமாகிவிட்டது. என் தொடர்பான காட்சிகள் இன்னும் ஒரு மாதத்துக்குள் படமாக்கப்படும்.

இவ்வாறு அக்ஷய் குமார் தெரிவித்தார்.

Leave a Reply