shadow

காந்தியவாதி சசிபெருமாளின் குடும்பமே கைது. தமிழக அரசு அதிரடி

sasiperumalபூரண மதுவிலக்கை வலியுறுத்தி நேற்று முன் தினம் போராட்டம் நடத்திய காந்தியவாதி எதிர்பாராதவிதமாக மரணம் அடைந்ததை அடுத்து அவருடைய மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோர் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக நல அமைப்புகளின் போராட்டங்கள் வலுப்பெற்று வருகிறது. மதுவிலக்கை அமல்படுத்துவது குறித்து தமிழக அரசு வாக்குறுதி கொடுத்தால்தான் சசிபெருமாள் உடலை வாங்குவோம் எனக் கூறி அவரது மகன் மற்றும் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை சசிபெருமாளின் மூத்த மகன் விவேக் மற்றும் மகள் கவியரசி ஆகியோர் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். ஆனால், இந்த போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி அளிக்க மறுத்து விட்டனர். இருப்பினும், காவல்துறையின் உத்தரவையும் மீறி அவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட முயன்றனர்.

இதையடுத்து, சசிபெருமாள் மகன் விவேக் மற்றும் மகள் கவியரசி உள்பட உண்ணாவிரதத்தில் ஈடுபட முயன்ற அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதேபோல், சேலம் கலெக்டர் அலுவலகம் முன் சசிபெருமாளின் மனைவி மகிழம் மற்றும் இளைய மகன் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், சசிபெருமாளின் உடலை இடமாற்றம் செய்யாமல் தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் போன்ற கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Leave a Reply