shadow

ஜெயலலிதா உயில் எழுதினாரா? யாருக்கு போகிறது சொத்து? நெல்லை வழக்கறிஞரின் அடுக்கடுக்கான கேள்விகள்

jayalalithaமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயில் எதுவும் எழுதி வைத்துள்ளாரா? அப்படி எழுதியிருந்தால் அந்த உயிலானது எந்த தேதியில் எழுதப்பட்டது எந்த தேதியில் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது போன்ற விபரங்கள் தர வேண்டும் என்பது உள்பட அடுக்கடுக்கான கேள்விக்கணைகளை தொடுத்துள்ளார் நெல்லை வழக்கறிஞர் பிரம்மா. அவர் தனது கேள்விகளுடன் அடங்கிய கவரை மத்திய பொது தகவல் அலுவலருக்கும், ராஜ்பவனுக்கும் அனுப்பியுள்ளார். அவர் கேட்டுள்ள கேள்விகளின் விபரம் பின்வருமாறு:

முதலமைச்சராக ஜெயலலிதா 5.12.2016ல் அப்போலோ மருத்துவமனையில் மரணம் அடைந்தார். அவரது இறுதி சடங்கு 6.12.2016ல் நடைபெற்றது. அதில் மத்திய அரசு சார்பாக கலந்து கொண்ட நபர்களின் பெயர், பணி பொறுப்பு, விவரம் தர வேண்டும்.

* இறுதி சடங்கில் முப்படையினர் மொத்தம் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள். அவர்கள் முப்படையில் என்னென்ன பணி பொறுப்பில் உள்ளார்கள் என்ற விவரம் தர வேண்டும்.

* இறுதி சடங்கில் ஜெயலலிதா பூத உடல் முப்படையினரிடம் எத்தனை மணிக்கு ஒப்படைக்கப்பட்டது. அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பூத உடலை முப்படையில் பெற்றுக் கொண்ட நபரின் பெயர், பணி பொறுப்பு விவரம் தர வேண்டும்.

* இறுதி சடங்கில் ஜெயலலிதா, பூத உடல் மீது வைக்கப்பட்டு இருந்த இந்திய தேசிய கொடியை எடுத்து சசிகலா நடராஜனிடம் எந்த அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டது என்ற விவரம் தர வேண்டும்.

* இறுதி சடங்கில் தேசிய கொடியை பெறுவதற்கு இந்திய அரசியலமைப்பின் சட்டத்தின்படி இறந்தவரின் வாரிசுதாரர்கள் யாரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். எந்த அடிப்படையில் எந்த வரிசையில் வாரிசுதாரர்களிடம் சட்டவிதிகளின்படி ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற விவரம் தர வேண்டும்.

* இறுதி சடங்கில் தேசிய கொடியை இறந்தவரின் வாரிசுதாரர் அல்லாத நபரிடம் எந்த அடிப்படையில் ஒப்படைக்கலாம் என சட்ட விதிகள் உள்ளது என்ற விவரம் தர வேண்டும்.

* ஜெயலலிதாவின் இறுதி சடங்கு இந்து சமய அடிப்படையில் நடைபெற்றுள்ளது எனில் இந்து வாரிசு உரிமை சட்டப்படி தேசிய கொடியை முப்படை வீரர்களிமிருந்து பெறுவதற்கு சட்ட அதிகாரம் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது என்ற விவரம் தர வேண்டும்.

* மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அரசு மரியாதை அடிப்படையில் எந்த சட்டபிரிவின் கீழ் முப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு குண்டுகள் முழங்க இறுதி சடங்கு நடைபெற்றது என்ற விவரம் தர வேண்டும்.

* இறுதி சடங்கில் மொத்தம் எத்தனை குண்டுகள் முழுங்கப்பட்டது என்ற விவரம் தர வேண்டும்.

* முதல்வர் பதவியிலிருந்த காரணத்தினால் ஜெயலலிதாவுக்கு அரசு மரியாதையும், குண்டு முழக்கமும் மற்றும் அவரது பூத உடலை ராணுவ வாகனத்தில் ஏற்றி செல்லப்பட்டுள்ளது எனில் எந்த சட்டப்பிரிவின் கீழ் இந்த நடைமுறை அனுமதிக்கப்படுகிறது என்ற விவரம் தர வேண்டும்.

* ஜெயலலிதாவுக்கு இறுதி சடங்கு நடைபெறுவதற்கு முன்பு எத்தனை நாட்களுக்கு முன்பு அல்லது எத்தனை மணி நேரத்திற்கு முன்பு ஜெயலலிதா முதல்வர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார் என்ற விவரம் தர வேண்டும்.

* இறுதி சடங்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடைபெற்றது போல தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு எந்தெந்த முன்னாள் முதல்வர்களுக்கெல்லாம் அரசு மரியாதையுடன் நடைபெற்றுள்ளது என்று விவரம் தர வேண்டும்.

* அரசு மரியாதை கேட்டு விண்ணப்பம் செய்ய வேண்டுமெனில் விண்ணப்பம் செய்ய வேண்டிய நபரின் பெயர், முகவரி தர வேண்டும். மேலும் விண்ணப்பம் செய்யும் தகுதி யார், யாருக்கெல்லாம் உள்ளது என்ற விவரம் தர வேண்டும்.

* முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எழுதிய உயிலின் நகல் தர வேண்டும்.

* உயிலானது எந்த தேதியில் எழுதப்பட்டது எந்த தேதியில் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது என்ற விவரம் தர வேண்டும். அரசிடம் கொடுக்கப்பட்ட உயிலினை பெற்றுக் கொண்ட அதிகாரியின் பெயர், பணி பொறுப்பு மற்றும் உயிலை பெற்றுக் கொண்டமைக்கு பதிவேட்டில் பதிவு செய்யயப்பட்டு வழங்கப்பட்ட எண் விவரம் தர வேண்டும்.

* தமிழக முதலமைச்சராக பன்னீர் செல்வம் எந்த தேதியில் முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டார். பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்ட நேரம், நாள் விவரம் தர வேண்டும்.

* முதலமைச்சர் பதவி ஏற்றபொழுது அவருடன் மொத்தம் எத்தனை அமைச்சர்கள் பதவியேற்றார்கள் என்ற விவரம் தர வேண்டும். அவர்களுக்கு ஆளுநர், பதவி பிரமாணம் எத்தனை மணிக்கு செய்து வைத்தார். எந்த தேதியில் என்ற விவரம் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பணி பொறுப்பு ஏற்று கையொப்பமிட்ட பதிவேட்டின் நகல் தர வேண்டும்

* முதலமைச்சர் பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு எம்.எல்.ஏக்கள் ஒப்புதல் அளித்து கொடுத்த கடித நகல் தர வேண்டும்.

* முதலமைச்சராக பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு என்ன பொறுப்பு வைத்திருந்தார் என்ற விவரம் தர வேண்டும். சட்டமன்ற உறுப்பினர் தவிர வேறு என்னென்ன பொறுப்புகளிலிருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டார் என்ற விவரம் தர வேண்டும்.

* முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்தார் என்ற செய்தி அதிகாரப்பூர்வமாக அரசு எத்தனை மணிக்கு வெளியிட்டது என்ற விவரம் தர வேண்டும்.

* முன்னாள் முதல்வர் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காலத்தில் எந்தெந்த தேதிகளில் ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டார் என்ற விவரம் தர வேண்டும்

* முன்னாள் முதல்வர் சிகிச்சை பெற்ற மருத்துவமனையின் மருத்துவர்கள் முன்னாள் முதல்வர் உடல்நலம் குறித்து எழுத்துப்பூர்வமாக ஆளுநரிடம் கொடுத்த நகல் தர வேண்டும்.

* தமிழக அரசின் முதல்வராக பொறுப்பு வகித்து இறந்த பின்னர், மரபுபடி தற்காலிக முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவது தமிழ்நாட்டின் நடைமுறையில் இருந்துள்ளது. ஆனால் இப்போது மட்டும் மரணமடைவதற்கு முன்பு முதல்வராக பன்னீர் செல்வம் தேர்வு செய்யப்பட்டுள்ளார் எனில் முன்னாள் முதல்வருக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடத்துவதற்கு எந்த வகையில் சட்டத்தின் வழியில் அனுமதிக்கப்பட்டது என்ற விவரம் தர வேண்டும்.

* முன்னாள் முதல்வர் நல்லடக்கம் செய்யப்பட்ட இடமானது யாருக்கு சொந்தமான இடம் என்ற விவரம் தர வேண்டும்.

* இடமானது அரசின் பராமரிப்பிலும் அரசுக்கு சொந்தமாகவும் உள்ளது எனில் அந்த இடத்தில் தமிழக முன்னாள் முதல்வர்களை நல்லடக்கம் செய்ததற்கு வழங்கப்பட்ட அனுமதி கடித நகல் தர வேண்டும்.

* முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் எந்த தேதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் என்ற விவரம் தர வேண்டும்.

* கட்டணமானது என்னென்ன வகைக்கெல்லாம் கொடுக்கப்பட்டது. மருத்துவருக்கு கொடுக்கப்பட்ட கட்டணம். அப்போலோவில் ரூம் வகைக்கு கொடுக்கப்பட்ட கட்டணம். மருந்து வகைக்கு கொடுக்கப்பட்ட கட்டணம் உட்பட அனைத்து வகையான கட்டணங்களும் சேர்த்து மொத்தம் எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்ற விவரம் தனித்தனியே வழங்கப்பட்ட தொகை தேதி வாரியாக மற்றும் கொடுக்கப்பட்ட வரைவோலை, காசோலை, பணம் விவரம், வங்கியின் விவரம், காசோலை எண் உட்பட அனைத்து தகவல்களும் தர வேண்டும்

இவ்வாறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

Leave a Reply