ஜி.எஸ்.டியால் 7 முதல் 8 கோடி பேர் வரை வேலை இழந்துள்ளனர்: சரத் யாதவ்
ஜிஎஸ்டி வரிமுறை அமலுக்கு வந்து சரியாக ஒருவருடம் முடிந்துள்ள நிலையில் பாஜகவினர் இதனை பெருமையாகவும், காங்கிரஸ் கட்சியினர் இதனை குற்றஞ்சாட்டியும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் லோக்தந்திரிக் ஜனதா தள கட்சியைச் சேர்ந்த சரத் யாதவ் இன்று ஜிஎஸ்டி குறித்து கூறுகையில், ‘பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி போன்ற திட்டங்கள் நாட்டுக்கு நன்மை விளைவிக்கும் எனக்கூறி மோடி அறிவித்தார். ஆனால், அவர் கூறியதற்கு எதிராகவே நடந்துவருவதாகவும், இந்த திட்டங்களுக்கு அடிப்படை முன்னேற்பாடு எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி போன்றவற்றால் விவசாயிகளும், இளைஞர்களும் அதிக அளவில் துன்பப்பட்டதாகவும், அதனை நிவர்த்தி செய்ய மத்திய அரசு முயற்சி எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த இரண்டு திட்டங்களுமே சிறு வணிகர்களுக்கு மிகவும் சிரமம் அளித்ததாகவும், அதனால் அவர்களின் வணிகத்தை குறைப்பது அல்லது கைவிடுவதை தவிர வேறு வழியில்லாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டியால் 7 முதல் 8 கோடி பேர் வரை வேலை இழந்துள்ளதாகவும், இந்த நிலையில் ஜி.எஸ்.டியின் ஓராண்டு வெற்றியை மோடி அரசு கொண்டாடிவருவது உண்மைக்கு எதிரானது என்றும் சரத் யாதவ் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.