shadow
20tvpt-procession1__506778g
சபரிமலை: சபரிமலையில் மகரவிளக்கு விழா நிறைவு பெற்ற நிலையில் தினமும் மாளிகைப்புறத்தம்மன் சன்னிதானம் முன்பு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சபரிமலையில் நேற்று மகரவிளக்கு விழா நிறைவு பெற்றது. எனினும் வரும் 19-ம் தேதி வரை பூஜைகள் தொடர்ந்து நடைபெறுகிறது. தினமும் இரவு 9 .30 மணிக்கு மாளிகைப்புறத்தம்மன் யானை மீது சன்னிதானம் முன்பு எழுந்தருளுகிறார். மாளிகைப்புறத்தம்மன், ஐயப்பனை திருமணம் செய்வதற்கான வேண்டுதலுடன் செல்வதாக ஐதீகம். 17-ம் தேதி வரை இந்த பவனி நடைபெறுகிறது. கன்னி ஐயப்பன் சபரிமலைக்கு வராத ஆண்டில் திருமணம் செய்வதாக ஐயப்பன் கூறியதன் பேரில், 18-ம் தேதி சரங்குத்திக்கு மாளிகைப்புறத்தம்மன் எழுந்தருளுவார்.
அங்கு கன்னி ஐயப்ப பக்தர்கள் வந்ததன் அடையாளமாக மலை போல் குவிந்துள்ள சரக்கோலை கண்டு ஆரவாரம் இல்லாமல் கோயிலுக்கு திரும்புவார். வரும் 18-ம் தேதி காலை 10 மணியுடன் நெய்யபிஷேகம் நிறைவு பெறும். 19-ம் தேதி இரவு 10 மணி வரை பக்தர்களுக்கு தரிசன வசதி உண்டு. அன்று இரவு மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் குருதி பூஜை நடைபெறும். 20-ம் தேதி காலை 7 மணிக்கு நடை அடைக்கப்படும்.

Leave a Reply