shadow

தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பெண்கள் பெறும் பலன்கள்

women
‘‘தகவல் அறியும் உரிமைச் சட்டம் (Right to Information Act) என்பது, குடிமக்கள் தாங்கள் தெரிந்துகொள்ள விரும்பும் மத்திய, மாநில அரசு அலுவலகங்களின் நிலைத்தகவல்களை உரிமையுடன் கேட்டுப்பெற வழிவகுக்கும் முக்கியமான சட்டம். 2005-ம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்தின் மூலம், பெண்கள் என்ன பலன்கள் எல்லாம் பெற முடியும், அதற்கு விண்ணப்பிப்பது எப்படி, அது சம்பந்தப்பட்ட புகாரை எங்கு அளிக்க வேண்டும் என்பது பற்றி அறிந்துவைத்துக்கொள்வது சிறப்பு!’’ என்று சொல்லும் `ஆர்டிஐ’ செயல் திறனாளர் பூமா, அது பற்றிய விவரங்கள் தந்தார்.

மனுவை எப்படி எழுத வேண்டும்?

`ஆமாம்’, `இல்லை’ என்பது போன்ற கேள்வி – பதில் உரையாடலாக இல்லாமல், நமக்குத் தேவையான தகவல் என்ன என்பதை தெளிவாகவும், விரிவாகவும் கேட்க வேண்டும். உதாரணமாக, ‘நான் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தேன். உரிய நாட்கள் கடந்தும் அது இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை. என் விண்ணப்பத்துக்கான ரசீதை இதனுடன் இணைக்கிறேன். என் விண்ணப்பத்தின் நிலைத்தகவல் என்ன? இன்னும் எத்தனை நாட்களில் வாக்காளர் அடையாள அட்டை என் கைகளில் கிடைக்கும்? நான் செய்யவேண்டிய அலுவல் எதுவும் இருக்கிறதா?’ என விளக்கமாக எழுதி, தாசில்தார் அலுவலகத்தில் `ஆர்டிஐ’ மனுவை அளிக்க வேண்டும் (இந்தச் செயல் முறை, புது குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்துக் கிடைக்க வில்லை என்றாலும் பொருந் தும்).

நினைவில்கொள்க… போதிய விவரங்கள் இல்லாத மனுக்கள் நிராகரிக்கப்படும்.

மனுவை யாருக்கு அனுப்ப வேண்டும்?  

எந்த அரசு அலுவலகத்தில் தகவல் கோரப்படுகிறதோ, அந்த அலுவலகத்தின் பொதுத் தகவல் அதிகாரிக்கு (PIO – Public Information Officer) அனுப்ப வேண்டும். பொதுத் தகவல் அதிகாரி என்பவர், ஒவ்வொரு அரசுசார் நிறுவனங்களின் செய்தித் தொடர்பு ஒருங்கிணைப்பாளர்.

‘பெறுநர்’ முகவரியில், ‘பொதுத் தகவல் அதிகாரி’ எனக் குறிப்பிட்டு, எந்த அலுவலகமோ, அதன் பெயரையும் முகவரியையும் குறிப்பிட்டு, அந்த தபாலில் 10 ரூபாய்க்கான நீதிமன்ற கட்டண முத்திரை வில்லை (court fee stamp) ஒட்டி அனுப்ப வேண்டும். தமிழ்நாட்டில் இருக்கும் மத்திய அரசு நிறுவனங்களிடம் தமிழிலேயே மனு அனுப்பி, தமிழிலேயே பதில் தரச்சொல்லிக் கோரலாம்.

மனுவுக்கு பதில் வரவில்லை என்றால்?

பொதுத் தகவல் அதிகாரியிடம் இருந்து பதில் கடிதம் வரவில்லை என்றால், அவருக்கு மேலே உள்ள மேல்முறையீட்டுக்கான அதிகாரிக்கு (Appellate Authority) மனு அனுப்பலாம். மனுவில் ‘பொருள்’ என்பதன் கீழ், பொதுத் தகவல் அதிகாரி இந்நாள்வரை தகவல் தராததன் காரணமாக,  `ஆர்டிஐ’ சட்டத்தின்படி அவர் பணிபுரியவில்லை எனத் தெளிவாக குறிப்பிட்டு, முதலில் அனுப்பிய மனுவின் நகலையும் தவறாமல் இணைத்து அனுப்பவும்.

அதிகாரிகள் எத்தனை நாட்களுக்குள் நமக்கு பதில் தரவேண்டும்?

பொதுத் தகவல் அதிகாரி, 30 முழு வேலை நாட்களுக்குள் அனுப்ப வேண்டும். அதேபோல, மேல்முறையீடு செய்த அதிகாரியும் 30 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும்.

இரண்டு அதிகாரிகளிடம் இருந்தும் பதில் இல்லை என்றால்?

அடுத்ததாக, `ஆர்டிஐ’யின் தலைமை யான மாநில தகவல் ஆணையத்துக்கு… `மாநிலத் தகவல் ஆணையம், நம்பர் – 2, ஆலையம்மன் கோயில் தெரு, தி.நகர், சென்னை-18’ என்ற முகவரிக்கு மனு அனுப்பலாம். மிகப்பெரும்பாலும், முதல் இரண்டு மனுக்களுக்கே பதில் கிடைத்துவிடும்.

மனுவுக்கு பதில் வரும்போது கவனிக்க வேண்டிய அம்சம் என்ன?

தபால் வந்தவுடன், அதைப் படித்துப் பார்க்காமல் கையெழுத்திட்டு வாங்கும்பட்சத்தில், ‘உள்ளே உள்ளவற்றை படித்துப் பார்க்காமல் பெற்றுக்கொள்கிறேன்’ என்று ரசீதில் எழுதி, கையெழுத்திட்டுக் கொடுக்கலாம். போதிய தகவல்கள் இல்லை என்று மேல்முறையீடு செய்யும்போது, அது உதவும்.

பெண்களுக்கு எப்படி பயன்படும்?

 ஒரு பெண் தன் குடும்ப சொத்தில் தனக்கு உரிமை இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள, தன் குடும்பத்தின் விவரிக்கக்கூடிய அனைத்துத் தகவல்களையும் மனுவில் எழுதலாம். இந்த சொத்துக்கள் அனைத்தும் அவர் தந்தையின் சுயசம்பாத்தியமா, பரம்பரைச் சொத்தா என்பதைக் குறிப்பிட்டு, ‘இதில் என்னுடன் பிறந்தவர்கள்போக, எனக்கு எவ்வளவு சதவிகித பங்கு இருக்கிறது? நானும் சம்மதித்தால்தான் இதனை விற்க முடியுமா?’ என கேட்கவிரும்பும் கேள்விகளை அடுக்கலாம். மனுவை மாவட்ட நீதிமன்றத்துக்கு தபாலில் அனுப்பலாம் (முகத்துக்கு நேராகவோ, தொலைபேசி மூலமாகவோ தொடர்புகொள்ளக் கூடாது).

ஒருவேளை கோரிய மூன்று கேள்விகளில், ஒரு கேள்விக்கு மட்டுமே தகவல்கள் பதிலாகக் கிடைத்தால், அந்த இரண்டு கேள்விகளை மீண்டும் மேல்முறையீட்டு அதிகாரிக்கு (Appellate Authority) மனுவாக அனுப்பலாம்.

தினமும் இரவு யாரோ வீட்டு வாசலில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி, காலையில் எடுத்துச் செல்கிறார்கள். அது அச்சம் தருவதாக இருக்கிறது எனில், போக்குவரத்துத் துறை அதிகாரிக்கு வண்டியின் பதிவெண்ணைக் குறிப்பிட்டு, விவரத்தைக் கூறி, அது யாருடைய வண்டி என்ற தகவலைக் கோரிப் பெறலாம். அவர் மேல் நடவடிக்கை எடுக்கச் சொல்லலாம். அல்லது 101 என்கிற அவசர எண்ணுக்கு அழைத்தும் புகாரைப் பதிவுசெய்யலாம்.

 விதவைப் பெண் ஓய்வூதியம் பெறுவோர், கணவனால் கைவிடப்பட்டவர்கள் (குழந்தையுடன் வசிக்கும் பெண்கள்) உள்ளிட்ட பெண்கள், ‘எனக்கு வேலை கிடைக்குமா?’ என்பதையும், ‘கணவர் கைவிட்டுப்போய் 7 ஆண்டுகள் ஆகிவிட்டபோதிலும், அவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. அவருக்கு ‘இறப்பு சான்றிதழ்’ வழங்கப்படுமா?’ போன்ற விவரங்களையும் கேட்கலாம். வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு மனு கொடுக்க வேண்டும். கணவர் காணாமல் அல்லது கைவிட்டுப் போனால், அவர் காணவில்லை என்கிற புகாரை உடனே அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையில் (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான், ஒருவேளை ஏழு ஆண்டுகளுக்குப் பிறகும் எந்தத் தகவலும் இல்லை என்றால், `எஃப்.ஐ.ஆர்’-ன் நகலைக் கொண்டு அணுக முடியும்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்தவர்கள், ‘சீனியாரிட்டி அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்பட்டு எனக்கு எப்போது வேலை கிடைக்கும்?’ என்ற தகவலை, மாவட்ட வேலைவாய்ப்பு மையத்துக்கு மனு அனுப்பிப் பெறலாம்.

மகளிர் குழுக்களுக்கான சுயதொழிலுக்கு எவ்வளவு கடன் கொடுக்கப்படும், எதன் அடிப்படையில் கொடுக்கப்படும், அதற்கான விதிமுறைகள் என்ன என்பது போன்ற தகவல்களை, மாநில அரசாங்கத்துக்கு மனு அளித்துப் பெறலாம். அரசாங்கம் சார்ந்த தகவல் பெற தலைமைச் செயலகத்துக்கே அனுப்பலாம். ஆனால், அந்தந்த துறை சார்ந்த தகவலுக்கு, அதற்கேற்ற துறையைத்தான் அணுக வேண்டும். முகவரி தெரியவில்லை என்றால் உடனே அவர்களுக்கு அனுப்பிவிடக் கூடாது. அதுமட்டுமின்றி, மகளிர் சுயதொழில் குழுக்களுக்கு தரப்படும் தொகை, ஆட்சிக்கு ஏற்றவாறு மாறுபடும்

தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியைகளுக்கு பி.எஃப் தகுதியுடைமை இருந்தால், அவர்களின் சம்பளத்தில் இருந்தே பள்ளி நிர்வாகம் ஒரு தொகையைப் பிடித்து வைத்திருக்கும். வேறு வேலைக்குச் செல்லும்போது, அதனை பள்ளி, சம்பந்தப்பட்ட ஆசிரியைக்கு அளித்துவிட வேண்டும். அது தொடர்பான தகவல்களை அறிய, பி.எஃப் அலுவலகத்துக்கு `ஆர்டிஐ’ மனு அனுப்பலாம். அரசாங்கத்திடம் இருந்து ஊக்கத்தொகையோ, மானியமோ பெறும் எந்த நிறுவனமும் இதற்குக் கீழே வரும்.

Leave a Reply