கேரள மாநிலத்தின் கண்ணூர் பகுதியின் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொறுப்பாளராக செயல்பட்டு வந்த மனோஜ் என்பவரை நேற்று மர்ம நபர்கள் வெடிகுண்டுகளை வீசி படுகொலை செய்ததால் மாநிலத்தின் பல பகுதிகளில் இன்று முழு அடைப்பு நடத்தப்படுகிறது. இதனால் தமிழகத்திலிருந்து செல்லும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் கேரள எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அமைப்பு பொறுப்பாளராக உள்ள மனோஜ் என்பவர் தனது நண்பருடன் காரில் நேற்று காலை கண்ணூர் அருகேயுள்ள டைமண்ட் சந்திப்பு அருகே சென்றபோது, ஜீப்பில் வந்த ஒரு கும்பல் மனோஜ் காரை வழிமறித்து வெடிகுண்டுகளை வீசினர். இதில் மனோஜ் வந்த கார் கவிழ்ந்தது.
பின்னர் காரில் இருந்த மனோஜையும் அவரது நண்பரையும் வெளியே இழுத்து வந்த மர்ம கும்பல் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்துவிட்டு பின்னர் மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டனர்.
மனோஜ் கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. தொண்டர்கள் சம்பவ பகுதியில் குவிந்தனர். மனோஜை கொலை செய்தவர்களை உடனே கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. மேலும் இன்று கேரளா முழுவதும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த முழு அடைப்பு காரணமாக திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம் பகுதிகளில் காலையில் ஓடிய பஸ்களும் பின்னர் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்
Leave a Reply
You must be logged in to post a comment.