முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தேவையில்லாமல் வீண் வம்புக்கு இழுக்கிறார் என்றும் அவருடைய இந்த செயல் தொடர்ந்தால் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் கூறியுள்ளது.
இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மாநில செய்தித் தொடர்பாளர் என்.சடகோபன் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:
” முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு துறை மந்திரியாக இருந்த தயாநிதிமாறன் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, சென்னையில் உள்ள அவரது வீட்டில் சட்ட விரோதமாக தொலைபேசி இணைப்பை ஏற்படுத்திக்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், அவர் மீது 2013-ம் ஆண்டு சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
அதன் அடிப்படையில் சி.பி.ஐ. மேற்கொண்ட விசாரணையை தயாநிதிமாறனின் தனிச்செயலாளர் மற்றும் சன்தொலைக்காட்சி நிறுவனத்தின் 2 ஊழியர்கள் உள்பட 3 பேரை சி.பி.ஐ. தற்போது கைது செய்துள்ளது.
தன் மீது சாட்டப்பட்டுள்ள குற்றங்களை சந்திக்க தைரியம் இல்லாமல், தேவையின்றி ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மீது தயாநிதிமாறன் அபாண்டமான பழியை சுமத்தி உள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கும், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. இதை தமிழக மக்களும் நன்கு அறிவர்.
ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இருந்து வருகிறார். அவர் நமது நாட்டில் நடைபெற்றுள்ள பல்வேறு ஊழல்களை தனது கட்டுரைகளின் வாயிலாக வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளார். அவர் வெளிப்படுத்திய ஊழல்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எவரும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மீது எவ்வித குற்றச்சாட்டையும் கூறியதில்லை. தயாநிதிமாறன் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டினை திசை திருப்பும் பொருட்டு வேண்டுமென்றே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை வம்புக்கு இழுத்துள்ளார்.
தமிழகத்தில் 75 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அமைதியாக, ஆக்கப்பூர்வமான பல செயல்களில் ஈடுபட்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ்.சின் வளர்ச்சிக்கு எந்த அரசியல் கட்சியின் ஆதரவோ, உதவியோ தேவையில்லை. கட்சி, பதவி, அரசியல் அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட இயக்கம் ஆர்.எஸ்.எஸ். என்பதை நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிவர்.
தமிழகத்தில் திராவிட இயக்கங்களின் இடையூறுகள், அவதூறுகள், அபாண்ட குற்றச்சாட்டுகள் என அனைத்தையும் கடந்து, தமிழக மக்களின் அமோக ஆதரவுடன் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்து வருகிறது.
தனது ஊழலை மூடி மறைப்பதற்காகவும், பிரச்சினையை திசை திருப்புவதற்காகவும், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை வீண் வம்புக்கு இழுக்கின்ற தயாநிதிமாறனை தமிழக ஆர்.எஸ்.எஸ். வன்மையாக கண்டிக்கிறது” என்று கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.