shadow

சீனாவில் 30 கால்பந்து பள்ளிகள் தொடங்க ரொனால்டோ திட்டம்
ronaldo
பிரேசில் கால்பந்து அணிக்காக மூன்று முறை உலகக்கோப்பை தொடரில் விளையாடிய பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் ரொனால்டோ சீனாவில் 30 கால்பந்து பள்ளிகளை தொடங்க இருப்பதாகவும், இதன்மூலம் சீனா கால்பந்து விளையாட்டில் பெரும் முன்னேற்றம் அடையும் என்றும் கூறப்படுகிறது.

சீன அதிபர் ஜி ஜின்பிங் அவர்கள் ஒரு தீவிர கால்பந்து பிரியர் என்பதால், உலகக்கோப்பை கால்பந்து போட்டியை அவர் சீனாவில் நடத்த முயற்சி செய்து வருகிறார். அவருடைய இந்த முயற்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும் ரொனால்டோ, சீனாவில் கால்பந்து விளையாட்டை மேம்படுத்து 30 கால்பந்து பள்ளிகளை துவக்கவுள்ளார்.

இதற்காக அவர் பீஜிங், ஷாங்காய், ஷென்சென் ஆகிய இடங்களை தேர்வு செய்து வைத்துள்ளதாகவும்  நவம்பர் மாதம் சீனாவின் தலைநகரான பீஜிங்கில் தனது முதல் பள்ளியை தொடங்க ரொனால்டோ திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக முழு நிதி திரட்டுதல் போன்ற முக்கிய வேலைகளில் அவர் தற்போது ஈடுபட்டு வருகிறார்.

39 வயதாகும் ரொனால்டோ தனது கால்பந்து பள்ளிகள் குறித்து கூறுகையில் ‘‘சீனாவில் நான் இந்த கால்பந்து பள்ளிகளை திறப்பதற்கு வியாபார நோக்கத்தை தவிர முக்கியமான காரணம் என்னவென்றால், இங்கு ஏராளமான கால்பந்து ரசிகர்களும் வீரர்களும் உள்ளனர். அதேபோல் சீன அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் கால்பந்து முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. என்னுடைய கால்பந்து பயிற்சி முறை சீன வீரர்களின் முன்னேற்றத்திற்கு உதவிகரமாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். சீன வீரர்கள் பெரிய அடித்தளத்தையும் உறுதியையும் பெற்றுள்ளனர். ஆனால், இன்னும் முறையாக கருத்தாக்கம் மற்றும் பயிற்சி முறை இல்லாமல் இருக்கிறார்கள்’’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply