கடந்த சில நாட்களாக தங்கம் விலை அதிகளவில் சரிந்து வரும் நிலையில் தங்கத்தை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதால் தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மன்மோகன் சிங் தலைமையிலான கடந்த காங்கிரஸ் அரசு, 2013ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தங்கம் இறக்குமதிக்கு ஒருசில கட்டுப்பாடுகள் விதித்தது. இதனால், தங்கம் இறக்குமதி பெருமளவு குறைந்தது. அதன்பின்னர் கடந்த பாராளுமன்றதேர்தலுக்கு ஏப்ரல் மாதம், ஒருசில கட்டுப்பாடுகளை காங்கிரஸ் அரசு தளர்த்தியது. அந்த சமயத்தில் இறக்குமதி ஓரளவுக்கு அதிகரித்தது. சென்ற மாதம் தங்கம் இறக்குமதி 285 சதவீதமாக அதிகரித்த நிலையில் தங்கம் இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று சந்தையில் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் அதற்கு எதிர்பாராக தங்கம் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் நேற்று நீக்கி உள்ளன.
தங்கத்தை இறக்குமதி செய்யும்போது, 80 சதவீத தங்கத்தை வைத்துக் கொண்டு, 20 சதவீத தங்கத்தை கண்டிப்பாக ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற விதிமுறையையும் ரத்து செய்துள்ளன. இந்த அறிவிப்பு தங்கம் வர்த்தகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து அகில இந்திய நகை வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர் கூறும்போது, ”உலக சந்தைகளில் தங்கத்தின் ஒட்டுமொத்த தேவை குறைந்து வருகிறது. அத்துடன், தங்கம் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு விட்டதால், தங்கம் விலை மேலும் குறையும்” என்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.