இளங்கோவன் பதவி பறிபோக யார் காரணம்?
தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தனது பதவியை ராஜினாமா செய்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தி இன்றுதான் வெளியே வந்தாலும் அவர் ராஜினாமாவை கடந்த வாரமே தலைமையிடம் கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
தேர்தல் தோல்வி குறித்து விளக்கம் அளிக்க டெல்லி சென்ற இளங்கோவனை ராகுல்காந்தி தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்யுமாறு உத்தரவிட்டதாகவும் அதன் காரணமாக அவர் அப்போதே ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
தொகுதியில் செல்வாக்கு மிக்க விஜயதாரிணி மீது மோதல் போக்கை கடைபிடித்தது, அரவக்குறிச்சி தொகுதியை ஜோதிமணிக்கு பெற்றுத்தர முயற்சி செய்யாதது, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் டாக்டர் விஷ்ணுபிரசாத் செய்யாறு தொகுதியில் தோல்வியடைய உள்ளடி வேலை செய்தது என புகார் மேல் புகார் இளங்கோவன் மீது சென்றதுதான் இளங்கோவனின் பதவி பறிபோக காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் திமுக கூட்டணியை ராகுல்காந்தி விரும்பவில்லை என்றும் இளங்கோவனின் அழுத்தம் காரணமாகத்தான் திமுக கூட்டணிக்கு அவர் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. தலைவர் பதவிக்கு பீட்டர் அல்போன்ஸ், தங்கபாலு, செல்வகுமார், திருநாவுக்கரசர், குஷ்பு உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் போட்டியில் குதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply
You must be logged in to post a comment.