சிபிஐ விசாரணை தேவை. திருமாவளவனை சந்தித்த பின்னர் ராம்குமார் தந்தை பேட்டி
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், கடந்த ஞாயிறு அன்று மர்மமான முறையில் சிறையில் மரணம் அடைந்தார். இந்த மரணம் தற்கொலையா? கொலையா? என்ற சந்தேகம் வலுத்து வரும் நிலையில் இதுகுறித்து சிபிஐ விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும் என்று ராம்குமாரின் தந்தை பரமசிவம் கூறியுள்ளார். முன்னதாக அவர் கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமாவளவனை சந்தித்த பின்னர் பரமசிவம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராம்குமார் மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு வலியுறுத்துவது தொடர்பாக திருமாவளவனைச் சந்திக்க வந்தேன். எனது மகன் ராம்குமார் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அதிகாரிகள் அவனை கொலை செய்துவிட்டனர். சிபிஐ விசாரணக்கு உத்தரவிட்டால்தான் எனது மகன் உடலை பெற்றுக்கொள்வேன்’’ என்று கூறினார்.
இதுகுறித்து திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சுவாதி கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் இருந்த ராம்குமார் , ‘தற்கொலை செய்து கொண்டார்’ என்று போலீஸார் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் சாவில் மர்மம் உள்ளது. ராம்குமாரின் சாவு தற்கொலை என்று கூறி சுவாதி கொலையில் உள்ள பின்னணியை மூடி மறைக்க முயல்கின்றனர். ராம்குமாரின் வழக்கறிஞர் கூறும் கருத்துகளை புறம்தள்ள முடியாது. சுவாதி கொலையையும், ராம்குமார் இறந்ததையும் விசாரிக்க சிபிஐ விசாரணை அவசியம் வேண்டும்.
ராம்குமார் இறந்தது தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி இல்லாமல் உச்சநீதிமன்ற நீதிபதிதான் விசாரிக்க வேண்டும். பேரறிவாளன் சமீபத்தில் சிறையில் தாக்கப்பட்டார். இதில் எதிர்பாராமல் பேரறிவாளன் இறந்திருந்தால் அதனையும் தற்கொலை என்று கூறி போலீஸார் மறைத்திருப்பார்கள். இதுபோன்ற சம்பவங்கள் தற்போது சிறையில் அதிகளவில் நடந்து வருகின்றன என்று கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.