shadow

ramdossஒரு பக்கம் விவசாயிகளின் மானியங்களை குறைத்தும் இன்னொரு பக்கம் யூரியா விலையை உயர்த்தவும் மத்திய அரசு முடிவு செய்திருப்பது வேளாண் தொழிலை அழிக்கும் செயல் என்று பாமக நிறுவனர்  டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ,” யூரியா மீதான விலைக் கட்டுப்பாட்டை நீக்கவும்,அதிகபட்ச விலையை உயர்த்தவும் மதிய அரசு முடிவு செய்திருப்பதாகச்  செய்திகள் வெளியாகியுள்ளன. இன்னொருபுறம் அனைத்து மானியங்களையும் படிப்படியாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக  நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியிருக்கிறார். மத்திய அரசின் இந்த முடிவுகள் மிகவும் தவறானவை மட்டுமின்றி கடுமையாக கண்டிக்கத்தக்கவை.

பசுமைப்புரட்சி என்ற பெயரில் விளைநிலங்களை மலடாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து உரங்கள் இல்லாமல் தொழில்முறை விவசாயம் செய்வது சாத்தியமற்றதாகி விட்டது. இந்த நிலையில், உரங்களைப் பயன்படுத்தாமல் லாபகரமாக விவசாயம் செய்வதற்கான மாற்று வழிகளைக் கண்டுபிடிக்காமல், உரத்தின் விலையை மட்டும் உயர்த்திக் கொண்டே செல்வது சரியல்ல.

 நடப்பாண்டில் நெல் கொள்முதல் விலை 3.81% மட்டுமே உயர்த்தப்பட்டிருக்கிறது. கரும்பு விலை 4.76% மட்டுமே அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், யூரியாவின் விலையை மட்டும் 20% உயர்த்துவது நியாயமா? என்று கொள்கை முடிவு எடுக்கும் பொறுப்பில் இருப்பவர்கள் சிந்திக்க வேண்டும்.  

யூரியா விலை உயர்த்தப்படுவது ஒருபுறமிருக்க, உணவுப்பொருட்களுக்கான மானியம் உள்ளிட்ட அனைத்து வகையான மானியங்களையும் படிப்படியாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இந்தியாவை பணக்கார நாடாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் மத்திய ஆட்சியாளர்களுக்கு இருந்தால் அது வரவேற்கப்பட வேண்டியது தான். இந்த இலக்கை எட்ட வேண்டுமானால் ஒழிக்கப்பட வேண்டியது ஏழ்மை தானே தவிர ஏழைகள் அல்ல. இதை உணர்ந்து மக்களுக்கு பயனளிக்கக் கூடிய மானியங்களை ரத்து செய்யும் திட்டத்தையும், யூரியா உரத்தின் மீதான விலைக்கட்டுப்பாட்டை நீக்கும் முடிவையும் மத்திய ஆட்சியாளர்கள் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

Leave a Reply