ஆர்.கே.நகரில் யாருக்கு ஆதரவு. ரஜினிகாந்த் அதிகாரபூர்வ அறிவிப்பு
ஆர்.கே.நகர் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் கங்கை அமரன் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களை சந்தித்துப் பேசினார். இதனால் இந்த தொகுதியில் அவர் பாஜகவுக்குத்தான் ஆதரவு தெரிவிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் சற்று முன்னர் தனது டுவிட்டரில் தான் யாருக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று அவர் அறிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க, சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி, பா.ஜ.க, தே.மு.தி.க, நாம் தமிழர் , தீபா பேரவை ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களை கடந்த செவ்வாய்க்கிழமை பா.ஜ.க வேட்பாளர் கங்கை அமரன் அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர் இருவரும் கட்டியணைத்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்ளும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியது.
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கங்கை அமரன், ரஜினிகாந்த் பா.ஜ.க.வை ஆதரிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். இதனிடையே, பா.ஜ.க.வுக்கு ரஜினிகாந்த் ஆதரவு அளிப்பார் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிரடியாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.