பாரத பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் நேற்றைய விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் ராஜபக்சே வருகையினால் தமிழகத்தில் பதட்டமான சூழ்நிலை இருந்ததால் ரஜினிகாந்த் மோடியின் விழாவில் பங்கேற்காமல், ஐதராபாத்தில் நடந்த லிங்கா படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.
மேலும் முதல்வர் ஜெயலலிதா கலந்துகொள்ளாத விழாவில் தான் மட்டும் கலந்துகொண்டால் அவருடைய கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்றும், தற்போது நல்ல வசூலுடன் ஓடிக்கொண்டிருக்கும் கோச்சடையான் திரைப்படத்திற்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது என்று கருதியும் பிரதமர் பதவியேற்பு விழாவை அவர் புறக்கணித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் ரஜினிகாந்த்துக்கு பதிலாக ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த்தும், மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷும் இந்த விழாவில் கலந்துகொண்டார்கள். ரஜினியின் சார்பாக இருவரும் பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யா தனுஷ் விழாவில் நடிகர் வினோத் கண்ணா அருகில் உட்கார்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோடியின் பதவியேற்பு விழாவை தமிழகமே புறக்கணித்திருக்கும் நிலையில் ரஜினி தன்னுடைய பிரதிநிதியாக மனைவியையும் மகளையும் அனுப்பியுள்ளது குறித்து கேள்விப்பட்ட தமிழ் அமைப்புகள் ரஜினியின் இரட்டை வேடம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளன.
Leave a Reply
You must be logged in to post a comment.