110 பயணிகளுடன் சென்ற விமானத்தை சுட்டு வீழ்த்த கூறியது உண்மைதான்: புதின்
ரஷ்ய அதிபர் புதினின் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து அங்கு வரும் 18-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி ஒரு ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் அதிபர் விளாடிமிர் புதின் பேசியுள்ளார். சுமார் இரண்டு மணிநேரம் கொண்ட இந்த ஆவணப்படத்தில் 2014-ம் ஆண்டு குளிர்க்கால ஒலிம்பிக் தொடரின் போது 110 பயணிகளுடன் சென்ற பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்த தான் உத்தரவிட்டதாக புதின் கூறியுள்ளார்.
இதுகுறித்து அந்த ஆவணப்படத்தில் புதின் கூறுகையில், கடந்த 2014-ம் ஆண்டு, பிப்ரவரி 7-ம் தேதி குளிர்க்கால ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக நான் காத்திருந்தேன். அப்பொழுது பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து, உக்ரைனில் இருந்து துருக்கி சென்ற பயணிகள் விமானம் ஒன்று கடத்தப்பட்டதாகவும், அதில் வெடிகுண்டுகள் இருந்ததாகவும், அதைக்கொண்டு ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெறும் குளிர்க்கால ஒலிம்பிக்கை சீர்குலைக்க மர்மநபர்கள் திட்டமிட்டுள்ளனர், என்றும் தெரிவித்தனர்.
அந்த விமானத்தில் 110 பயணிகள் பயணம் செய்தனர். ஆனால் குளிர்க்கால ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழாவில் சுமார் 40 ஆயிரம் பேர் கூடியிருந்தனர். இதையடுத்து அந்த விமானத்தை சுட்டு வீழ்த்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டேன். ஆனால் சில நிமிடங்கள் கழித்து, அந்த தகவல் பொய்யானது என்று எனக்கு அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் ஆபத்தின்றி அந்த விமானம் துருக்கிக்கு புறப்பட்டு சென்றது.
Leave a Reply
You must be logged in to post a comment.