டெட்ராய்ட் : சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்த இடம் பற்றி ரகசிய தகவல் அளித்தேன். ஆனால் சொன்னபடி ரூ.150 கோடி வெகுமதி தர அமெரிக்கா மறுக்கிறது என அமெரிக்காவை சேர்ந்த ரத்தினக்கல் வியாபாரி டாம் லீ குறை கூறியுள்ளார். அமெரிக்காவின் சிகாகோ பகுதியை சேர்ந்த ரத்தினக்கல் வியாபாரி டாம் லீ(63). இவர் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவருடன் சேர்ந்து ரத்தினக்கல் வியாபாரத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டுள்ளார்.

இதனால் அவரது குடும்பத்தினருடன் டாம் லீக்கு நெருக்கம். அப்போது பாகிஸ்தான் வியாபாரியின் குடும்பத்தை சேர்ந்த ஒருவர், டாம் லீயிடம் கடந்த 2003ம் ஆண்டு ஒரு ரகசிய தகவலை கூறியிருக்கிறார். ‘‘உங்க அமெரிக்கா வலை வீசி தேடும், ஒசாமா பின்லேடன், எங்கிருக்கிறார் தெரியுமா?’’ என கேட்டுள்ளார் அந்த நபர். ‘‘பாகிஸ்தானில்தான் இருக்கிறார் என கூறுகிறார்கள்.

ஆனால் அவரது மறைவிடத்தை அமெரிக்க உளவுத்துறை எப்.பி.ஐ.யால் துல்லியமாக கண்டுபிடிக்க முடியவில்லை’’ என்றார் டாம் லீ. ‘‘இங்குதான் பக்கத்தில் உள்ள அபோதாபாத் என்ற இடத்தில் வசிக்கிறார். அவரையும், அவரது குடும்பத்தினரையும் பெஷாவரிலிருந்து அபோதாபாத்துக்கு பாதுகாப்புடன் அழைத்துச் சென்றதே நான் தான். நான் உங்க எப்.பி.ஐ.,விட பெரிய உளவாளி’’ என பெருமையாக கூறியுள்ளார் அந்த நபர்.

இத்தகவலை டாம் லீ உடனடியாக அமெரிக்க சுங்கத்துறை அதிகாரிகளுக்கும், எப்.பி.ஐ.க்கும் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் அமெரிக்க கடற்படையின் சீல் பிரிவினர் அபோதாபாத்தில் உள்ள பின்லேடன் வீட்டுக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தி பின்லேடனை சுட்டுக் கொன்றனர். இது டாம் லீக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. 8 ஆண்டுக்கு முன் நாம் எப்.பி.ஐ.க்கு கூறிய ரகசிய தகவல் மிகச் சரியாக இருந்துள்ளதே. இதற்கு அரசிடம் இருந்து நிச்சயம் வெகுமதியும், பாராட்டும் கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருந்தார். பின் லேடன் கொல்லப்பட்ட பிறகும் எப்.பி.ஐ.யிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

எப்.பி.ஐ டைரக்டருக்கு இது தொடர்பாக பல முறை டாம் லீ கடிதம் எழுதினார். ‘‘நான்தான் பின்லேடன் இருப்பிடம் குறித்து 2003ம் ஆண்டு தகவல் தெரிவித்தேன். எனக்குத்தான் 25 மில்லியன் டாலர் (ரூ.154 கோடி) வெகுமதியை அளிக்க வேண்டும்’’ என டாம் லீ கோரியிருந்தார். எதுவும் பலனளிக்கவில்லை.

சட்டப்படி வெகுமதியை கேட்டுப் பெற டாம் லீ முடிவு செய்தார். இதற்காக சிகாகோவை சேர்ந்த ‘லோவி அண்ட் லோவி’ என்ற சட்ட நிறுவனத்தின் உதவியை நாடினார். அவர்கள் இது தொடர்பாக எப்.பி.ஐ டைரக்டர் ஜேம்ஸ் காமிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினர். இதற்கும் எப்.பி.ஐ பதில் அளிக்கவில்லை. இதனால் சர்வதேச செய்தி நிறுவனங்களிடம் எப்.பி.ஐ குறித்து டாம் லீ புகார் கூறியுள்ளார்.

பின்லேடன் மறைவிடம் குறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், ‘‘அபோதாபாத்தில் இருந்த பின்லேடன் வீடு 2005ம் ஆண்டு வரை கட்டப்படவில்லை. 2011ம் ஆண்டு ஏப்ரலில் பின்லேடன் அங்கு குடியேறியிருக்கலாம் என பாகிஸ் தான் அதிகாரிகள் தெரிவித்தனர்’’ என்கின்றனர்.

Leave a Reply