வடமாநில மின் தொடரை இணைக்கும் புதிய பாதை, ஜனவரியில் செயல்படத் தொடங்கும் என்று இந்திய மின் தொடரமைப்புக் கழக திட்ட இயக்குநர் ஐ.எஸ்.ஜா தெரிவித்துள்ளார்.
நவரத்னா அந்தஸ்து கொண்ட இந்திய மின் தொடரமைப்புக் கழகம், 78 கோடியே 70 லட்சத்து 53 ஆயிரத்து 309 பங்குகளை விற்பனை செய்ய உள்ளது. இந்த விற்பனை, இன்று தொடங்கி, வரும் 6-ம் தேதி முடிகிறது. நிறுவன முதலீட்டாளர்களுக்கு 5-ம் தேதியும், தனியார் முதலீட்டாளர்களுக்கு 6-ம் தேதிக்கும் பங்குகள் வழங்கல் முடிகிறது.
ஒவ்வொரு பங்குகளின் விலையும் ரூ.85 முதல் ரூ.90 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மின் தொடரமைப்புக் கழகம், நாடு முழுவதும் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 540 கி.மீ. மின் தொடர் பாதை மற்றும் 173 துணை மின் நிலையங்களைக் கொண்டு, 32 ஆயிரம் மெகாவாட் மின் விநியோகத்தை கையாள்கிறது. வடமாநில மின் தொகுப்பை இணைக்கும் புதிய மின் தொடரமைப்பு, ராய்ச்சூர் – சோலாப்பூர் இடையே அமைக்கப்பட்டு வருகிறது. இதில் உள்ள இரண்டு பாதைகளில் ஒரு பாதைக்கான பணிகள் விரைவில் முடிவடையும். முதல் பாதை வரும் ஜனவரி மாதம் செயல்பாட்டுக்கு வரும். இந்தப் பாதை முழு அளவிலான பயன்பாட்டுக்கு வர 6 மாதங்களாகும். இதன் மூலம், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள், வட மாநிலங்களில் இருந்து கூடுதல் மின்சாரம் பெற இயலும் அதனால் இனி தமிழகத்தின் மின்தட்டுப்பாடு நீங்க வாய்ப்புள்ளது இவ்வாறு ஜா கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.