shadow

அழிந்து கொண்டிருக்கும் சினிமாவை வாழ வையுங்கள்: ரஜினிக்கு பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலில் குதித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் அரசியலுக்கு வந்து ஆட்சியை பிடித்தால் தமிழகத்தில் அவர் செய்ய வேண்டிய மாற்றம் மிகப்பெரிய அளவில் உள்ளது.

இந்த நிலையில் திரையுலகையும் ரஜினிதான் காப்பாற்ற வேண்டும் என்ற குரல் தற்போது எழுந்துள்ளது. ஜிஎஸ்டி, சென்சார் பிரச்சனை உள்பட பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துவரும் தயாரிப்பாளர்களையும் திரையுலகையும் ரஜினி தான் களமிறங்கி காப்பாற்ற வேண்டும் என்று பிரபல தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா நேற்று நடந்த திரைப்பட விழா ஒன்றில் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது: இந்தத் தருணத்தில் உங்கள் அனைவரது சார்பிலும் ரஜினிக்கு ஒரு வேண்டுகோள். ஆண்டவனாலும் கூட காப்பாற்ற முடியாது என்ற நிலை வந்தபோது, நான் இருக்கேன் என்று வந்து ஒட்டுமொத்தமாக சரி செய்து கொடுத்தீர்கள். தற்போது தமிழ் சினிமா அனாதை போல் செத்துக் கொண்டிருக்கிறது.

ரஜினி சார்.. ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாத நிலைக்கு சினிமா சென்று கொண்டிருக்கிறது. நீங்கள் இறங்கி குரல் கொடுக்க வேண்டும். இப்போது கூட நீங்கள் அமைதியாக இருந்தீர்கள் என்றால் சினிமாவை வாழ வைக்க முடியாது. நீங்கள் சொன்னால் அத்தனை பேரும் திரும்பிப் பார்ப்பார்கள். மத்திய அரசு திரும்பிப் பார்க்கும். உங்களுடைய வார்த்தைக்கு கட்டுப்படும்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply