shadow

மண்பாண்ட தொழிலாளர்களுக்கு விலையில்லா மின் சக்கரம்: முதல்வர் உத்தரவு

jayalalithaa02
மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ரூ.4 கோடி செலவில் விலையில்லா மின் சக்கரம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக இருப்பதோடு, விவசாயத்திற்கு அடுத்தபடியாக கிராமப்புற மக்களுக்கு பெருமளவு வேலைவாய்ப்பினை வழங்கி வரும் தொழிலாக நெசவுத் தொழில் விளங்கி வருகிறது. இப்படிப்பட்ட இன்றியமையாத் தொழிலான நெசவுத் தொழிலின் வளர்ச்சிக்கு எனது தலைமையிலான அரசு முன்னுரிமை அளித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறையின் மூலம் பின்வரும் திட்டங்களை செயல்படுத்த நான் உத்தரவிட்டுள்ளேன்.

1. தமிழ்நாட்டில் இயங்கி வரும் ஆறு கூட்டுறவு நூற்பாலைகள் ரூ.175 கோடியே 23 லட்சம் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்டுள்ளன. இவ்வாலைகள் தற்போது விலையில்லா வேட்டி சேலை திட்டம், பள்ளி குழந்தைகளுக்கான விலையில்லா சீருடை வழங்கும் திட்டம் ஆகியவற்றிற்கு தேவைப்படும் நூல் வகைகளை உற்பத்தி செய்து வருகின்றன.

கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு தேவையான தரமான நூல் வகைகளை உற்பத்தி செய்து தொடர்ந்து வழங்கிட ஏதுவாக இவ்வாலைகளுக்கு தேவைப்படும் புதிய நவீன இயந்திரங்களான ‘டு-பார் – ஒன்-டிவிஸ்டர்’, ‘டபுளிங் இயந்திரங்கள்’, ‘கோம்பர் இயந்திரங்கள்’ , ‘ஓப்பன் எண்ட் நூற்பு இயந்திரங்கள்’ ஆகியவைகளை நிறுவிட நான் உத்தரவிட்டுள்ளேன். இவற்றுக்கு ரூ.14 கோடியே 20 லட்சம் செலவு ஏற்படும்.

2. தமிழ்நாட்டில், 1,357 கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 1,500 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கீழ் இயங்கி வரும் கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் பயன் பெறும் வகையில் அவர்களுக்கு நல்வாழ்வு காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோன்று, நெசவாளர் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கும் நல்வாழ்வு காப்பீட்டுத் திட்டம் நடப்பாண்டு முதல் செயல்படுத்த நான் உத்தரவிட்டுள்ளேன். இத்திட்டத்திற்கான ஆண்டு காப்பீட்டுக் கட்டணத் தொகையில் 50 சதவீத மானியம் பணியாளர்களுக்கு வழங்கப்படும். இந்த 50 சதவீத மானியத் தொகையை நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செலுத்தும்.

3. பூம்புகார் என அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழகம், தமிழ்நாட்டில் உள்ள கைவினைஞர்களால் செய்யப்பட்ட கைவினை பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கிறது. இப்பணியினை செம்மைப்படுத்தும் வகையில், கைவினைப் பொருட்களை மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கைவினைப் பொருட்கள் மேம்பாடு என்ற ஒரு புதிய திட்டத்தினை இந்த நிறுவனத்தின் மூலம் செயல்படுத்த நான் உத்தரவிட்டுள்ளேன்.

இந்தத் திட்டத்தின் கீழ் வடிவமைப்பு மேம்பாடு, ஒருங்கிணைந்த பயிற்சிகள், கைவினைஞர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கான பொது வசதி மையங்கள் அமைத்தல், கண்காட்சி மற்றும் கைவினைப்பொருள் சந்தை நடத்துதல், 10,000 கைவினைஞர்களுக்கு தலா ரூ.5,000/- மதிப்புள்ள விலையில்லா உபகரணப் பெட்டிகள் வழங்குதல் மற்றும் நுகர்வோர் / உற்பத்தியாளர் கூட்டங்களை நடத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.17 கோடியே 14 லட்சம் வழங்கும். மாநில அரசு ரூ.3 கோடியே 24 லட்சம் தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்திற்கு இணை மானியமாக வழங்கும்.

4. மண்பாண்ட தொழில் புரியும் மக்கள் மழைக் காலங்களில் சந்திக்கும் இடர்பாடுகளைக் களைந்திடும் வகையில் மழைக்கால நிவாரணத் தொகையாக மண்பாண்ட தொழிலாளர் குடும்பம் ஒன்றுக்கு ரூ. 4,000 வீதம் 2014-15-ஆம் ஆண்டு முதல் எனது தலைமையிலான அரசு வழங்கி வருகிறது.

தேர்தல் அறிக்கையில் மண்பாண்டங்கள் தயாரிக்க ‘சீலா வீல்’ மின் சக்கரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதியை அளித்திருந்தோம். இதன்படி மண்பாண்ட தொழிலாளர்களின் பணிப் பளுவை குறைத்து, உற்பத்தி திறனை மேம்படுத்த, இந்த ஆண்டு 2,000 மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ரூ. 4 கோடி செலவில் விலையில்லா மின் சக்கரம் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

5. மேலும், மண்பாண்ட தொழிலாளர்களின் நலனுக்காக, தேர்தல் அறிக்கையில் ‘மண்பாண்டங்கள் செய்வதற்கான தொழிற்கூடங்கள் அமைக்க மானியம் வழங்கப்படும்’ என்று வாக்குறுதி அளித்திருந்தோம். இந்த ஆண்டு ரூ.2 கோடி செலவில் கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் செயல்படும் மண்பாண்ட தொழில் கூட்டுறவு சங்கங்களின் பழுதடைந்த பணிக்கூடங்களை சீர் செய்தல் மற்றும் புதிய பணிக்கூடங்கள் கட்டுதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள நான் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த நடவடிக்கைகளின் மூலம், நெசவாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் வாழ்வு வளம் பெறும்” என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

Leave a Reply