shadow

Pongal celebrations 2k16 (1)

பௌர்ணமி தினங்களில் அம்பிகை வழிபாடு மிகவும் சிறப்பானது. என்று சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். ஸ்ரீசக்ர நாயகியான ஆதிபராசக்தி பதினாறு (16) நித்தியையாக மகா திரிபுரசுந்தரியாக பூரண ஒளியுடன் பௌர்ணமியன்று காட்சி தருவதாக புராணங்களும் சாத்திரங்களும் கூறுகின்றன.

ஒளிமயமான அன்னை தேவி பராசக்தியை, இந்த ஒளிமயமான பௌர்ணமி தினத்தில் பூசைகள் செய்து வழிபாடு செய்யும் போது அன்னையின் பரிபூரண அருள் கிடைக்கப்பெற்று விசேடமான பலன்கள் நமக்கு கிடைக்கிறது. கிரங்களின் அதிர்வு பெற்ற நாள் பௌர்ணமி நாளாகும்.

ஏழு கிரகங்களிற்குரிய நாட்கள் சேரும்போது ( ஞாயிறு திங்கள் என்று எந்த நாளில் பௌர்ணமி வருகிறதோ ) அதற்கேற்ப மனிதனின் அறிவு, புத்தி, மனம் மற்றும் சரீரத்திலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. பௌர்ணமியில் தேவி `ஸ்ரீசந்திரிகா’ என்ற பெயர் கொண்டு பிரகாசித்து அருள்பாலிக்கிறார்.

துர்க்கா தேவியை பௌர்ணமியில் முறைப்படி வழிபட்டு வந்தால் நாம் விரும்பியதெல்லாம் நிறைவேறும். துர்க்கையென்றால் துக்கங்களை அழிப்பவள் ஆகும். ஒவ்வொரு கிழமைநாட்களிலும் வரும் பௌர்ணமியில் அம்பிகையை எவ்வாறு வழிபட்டால் சிறப்பான பலன் கிட்டும் என்று சித்தர்கள் கூறியவற்றில் இருந்து சிலவற்றைக் கீழே தருகிறோம்.

• ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் பௌர்ணமியன்று அம்பிகைக்கு சிகப்பு ஆடை அணிவித்து, செந்தாமரை மலர்கள் சூட்டி, செந்தாமரை மலர்களால் அர்ச்னை செய்யவேண்டும். செவ்வாழைப்பழம், சர்க்கரைப் பொங்கல் நிவேதனமாக படைத்து வழிபடவேண்டும். அவ்வாறு வழிபடும் போது தீராத நோய்கள் எல்லாம் தீரும். இப்படி பூஜை செய்பவரை எந்த நோயும் அணுகாது.

• திங்கட்கிழமைகளில் வரும் பௌர்ணமியன்று அம்பிகைக்கு ஒரே நிற ஆடையணிவித்து, மந்தாரை, மல்லிகை மலர்கள் சாற்றி, இதே மலர்களினால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இவ்வாறு வழிபடும் போது சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும். செய்யும் தொழிலில் உயர்வு, வேலை வாய்ப்பு கிட்டும்.

• செவ்வாய்க்கிழமைகளில் வரும் பௌர்ணமி நாட்களில் அம்பாளிற்கு வெண் பட்டாடை அணிவித்து, செவ்வரளி பூ, சிகப்பு நிற பூக்களினால் அர்ச்சனை செய்து, சித்திரான்னம், தேன், பழங்கள் நிவேதனமாக படைத்து வழிபட வேண்டும். இதனால் வறுமை நீங்கும். கடன்கள் தீரும். கிரக தோஷங்கள், பில்லி, சூனியம் தீரும்.

• புதன்கிழமைகளில் வரும் பௌர்ணமி தினத்தில் பச்சை பட்டாடை அணிவித்து, முல்லை, நறுமணமுள்ள மலர்கள் அலங்கரித்து, அதே மலர்களால் அர்ச்சனையும் செய்து, பால்பாயாசம், பழரசங்கள், பஞ்சாமிர்தம் நிவேதனமாக படைத்து வழிபடவேண்டும். அறிவு வளரும், கல்வியில் அளப்பரிய முன்னேற்றம் கிட்டும். ஞாபக சக்தி அதிகரிக்கும். சந்தான விருத்தி கிட்டும்.

• வியாழக்கிழமைகளில் வரும் பௌர்ணமி தினத்தில் அம்பிகைக்கு மஞ்சள் நிற ஆடை அணிவித்து, மஞ்சள் நிற (பொன் நொச்சி, பொன்னரலி) நறுமணமுள்ள மலர்களால் அலங்கரித்து, அதே மலர்களால் அர்ச்சித்து வழிபட வேண்டும். சுண்டல், தயிர்ச்சாதம், பழங்கள் நிவேதனமாக படைத்து வழிபட வேண்டும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். திருமணத் தடைகள் நீங்கும். சகல விதமான தடைகளும் நீங்கும். தேர்வுகளில் வெற்றி கிட்டும்.

• வெள்ளிக்கிழமைகளில் வரும் பௌர்ணமி நாட்களில் அமபிகைக்கு பொன்னிற ஆடை அணிவித்து, மல்லிகை மலர்கள் சூட்டி, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்து, முக்கனிகள், கல்கண்டு, பொங்கல் நிவேதனமாக வைத்து வழிபடவும். திருமணத் தடைகள் நீங்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வர். பணவரவு அதிகரிக்கும். வராக்கடன் வரும்.

• சனிக்கிழமைகளில் வரும் பௌர்ணமி தினத்தன்று அம்பாளிற்கு நீலநிற ஆடை அணிவித்து, மருக்கொழுந்து, நீலநிற காக்கணம் (சங்குப்பூ) சாற்றி, அதே மலர்களால் அர்சித்து, காய்கறிகள், எள் அன்னம், பால், தேன் தயிர், நெய், கற்கண்டு நிவேதனமாக படைத்து வழிபடவும்.
நவக்கிரக தோஷம் நீங்கும். கடன் தீரும்.நோயில்லா வாழ்வு கிட்டும்.

பௌர்ணமி தினத்தில் பூரண பக்தியுடன் முறைப்படி பூஜை செய்து வழிபாடு செய்பவர்கள் கிரக தோஷங்களில் இருந்து விடுபட்டு நிம்மதியான, ஆரோக்கியமான வாழ்வு வாழலாம். விதியென்ற நமது வாழ்க்கை அமைப்பை மதி என்ற சந்திரனின் துணை கொண்டு நாம் மாற்றலாம்.

Leave a Reply