மனைவி மற்றும் 2 குழந்தைகளை தவிக்க விட்டு காதலியுடன் குடும்பம் நடத்திய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

சென்னை புழல் அந்தோணியார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீவாஸ் (37). சென்னைக் காவல் துறையில் உளவுப் பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஷீலா (32). இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 7 மற்றும் 4 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது பக்கத்து வீட்டுக்கு சோழவரத்தை சேர்ந்த ரேட்சல் (25) என்ற பெண் அடிக்கடி வருவார். அப்போது அவருக்கு ஸ்ரீவாசுடன் தவறான தொடர்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஸ்ரீவாஸ் அலுவலகத்தில் விடுமுறை எடுத்து விட்டு, காதலி ரேட்சலுடன் தலைமறைவாகி விட்டார்.  இதையடுத்து தனது கணவரை கண்டு பிடித்து தருமாறு ஷீலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

அதன் பின்னர் நடவடிக்கையில் இறங்கிய காவல் துறையினர், வேலூர் மாவட்டம் பொதிகையில் காதலியை திருமணம் செய்து வாடகை வீட்டில் குடித்தனம் நடத்தி வந்தவரை கண்டுபிடித்து கொண்டு வந்தனர். அவருக்கு காவல் துறையினர் பல ஆலோசனைகளை வழங்கிய பின்னரும், மனைவியுடன் வாழ மறுத்து, காதலி ரேட்சலுடன் மீண்டும் குடும்பம் நடத்த தொடங்கினார்.

வேதனை அடைந்த ஷீலா, கணவர் ஸ்ரீவாஸின் செயல்பாடுகள் குறித்து, சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் கொடுத்தார். அதன்தொடர்ச்சியாக மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கண்ணகி வழக்குப்பதிவு செய்து காவலர் ஸ்ரீவாசை சனிக்கிழமை கைது செய்தனர்.

Leave a Reply