8 வயது சிறுவனின் கடிதத்திற்கு உடனடியாக பதில் கடிதம் அனுப்பிய பிரதமர் மோடி
பெங்களூரை சேர்ந்த 3ஆம் வகுப்பு மாணவன் எழுதிய கடிதம் ஒன்றுக்கு உடனடியாக பதில் கடிதம் ஒன்றை பிரதமர் நரேந்திரமோடி எழுதி அனுப்பியுள்ளதாக வெளிவந்த செய்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
பெங்களூரை சேர்ந்த 8வயது சிறுவன் அபினவ், வித்யாரண்யபுரா தொட்டபொம்மசந்திரா என்ற பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறான். இந்த சிறுவன் தினமும் பள்ளிக்குச் செல்லும்போது போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி அவதிப்பட்டு வந்ததாகவும், இதனை அடுத்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண, தன்னுடைய தாத்தா கூறிய யோசனையின்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியதாகவும் கூறப்படுகிறது.
அதன்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு, அபினவ் எழுதிய கடிதத்தில், “கொரகுண்டேபாளையா வெளிப்புற சாலையில் ரயில்வே மேம்பால கட்டுமான பணிகள் பாதியிலேயே நின்றுவிட்டதால் அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. இதனால் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பள்ளிக்கு நான் செல்ல 45 நிமிடங்களுக்கு மேல் ஆகிறது. இந்தப் பிரச்னைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று எழுதியிருந்தான்.
இந்த கடிதத்திற்கு உடனடியாக பிரதமர் மோடி பதில் அனுப்பியுள்ளார். பிரதமரின் பதில் கடிதத்தில் ‘ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ரயில்வே மேம்பால கட்டுமான பணிகளை விரைவாக முடிக்கும்படி ரயில்வே துறை அதிகாரிகளுக்கு நரேந்திர மோடி உத்தரவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தது.
பிரதமரிடம் இருந்து பதில் கடிதம் வந்தது குறித்து சிறுவன் அபினவ் கூறும்போது, ‘நான் எழுதிய கடிதத்துக்கு பிரதமர் அலுவலகம் பதில் அனுப்பியது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறினான்
Leave a Reply
You must be logged in to post a comment.