பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வருவாரா சீன அதிபர்?
அரசு முறை பயணமாக சீனா சென்றுள்ள பாரத பிரதமர் நரேந்திரமோடி, சீன அதிபரிடம் இந்தியா வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். அதற்கு சம்மதம் தெரிவித்திருந்தாலும் அவர் இந்தியா வருவாரா? என்ற கேள்வியை அரசியல் விமர்சகர்கள் எழுப்பியுள்ளனர்.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சீனா சென்ற பாரத பிரதமர் மோடி மாநாட்டின் இடையே, சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்தும், சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.
மேலும் மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு வருமாறு ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஜின்பிங் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது.
இந்த தகவலை பின்னர் நிருபர்களிடம் தெரிவித்த வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே, இரு தலைவர்களும் இந்தியாவில் எந்த தேதியில் சந்தித்து பேசுவார்கள் என்பது பற்றி தற்போது முடிவு செய்யப்படவில்லை என்றும் விரைவில் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.