shadow

இந்தியாவில் தொழில் செய்ய அபுதாபு முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

modiபாரத பிரதமர் மோடி ஒவ்வொரு நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்யும் போது, அந்நாட்டில் உள்ள இந்தியர்கள் உள்பட தொழிலதிபர்களிடம், இந்தியாவில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுப்பார். அவருடைய அழைப்பை ஏற்று இதுவரை பல கோடி ரூபாய் மதிப்பில் இந்தியாவில் முதலீடு அதிகரித்துள்ள நிலையில் தற்போது அபிதாபி சென்றுள்ள மோடி, அங்குள்ள முதலீட்டாளர்களையும் இந்தியாவில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

2 நாள் சுற்றுப்பயணமாக வளைகுடா நாடான அமீரகம் (ஐக்கிய அரபு குடியரசு), சென்ற பிரதமர் மோடி, அபுதாபியில் உள்ள மஸ்தார்நகர் பகுதியினை நேற்று பார்வையிட்டார். பின்னர் அந்நகரில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து வல்லுனர்களிடம் கேட்டறிந்த மோடி, காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த பேட்டரி காரில் பயணம் செய்தார்

பின்னர் முதலீட்டாளர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றிய பிரதமர்மோடி, இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார். இந்தியாவில் சுற்றுலா மற்றும் காற்றாலை துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள் உள்ளதாக குறிப்பிட்ட அவர், குறைந்த முதலீட்டிலான 5 கோடி வீடுகள் அடுத்த 7 ஆண்டுகளில் இந்தியாவில் கட்டப்பட வேண்டும் என்று கூறினார்.

இந்தியாவின் சக்தியாக 125 கோடி மக்கள் திகழ்வதாக பெருமிதம் தெரிவித்த மோடி, தொழில்நுட்பத் துறையில் இந்தியாவுக்கு வேகமான வளர்ச்சி தேவை என்றும், கட்டுமானம் மற்றும் மேம்பாட்டுத் துறையில் இந்தியா வேகமாக வளர்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது உலக நாடுகள் அனைத்தும் அறிந்த ஒன்று என்றும், அந்நிய முதலீட்டிற்கு பல்வேறு வாய்ப்புக்களை தமது தலைமையிலான அரசு ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் பிரதமர் மோடி பேசுகையில், இந்தியாவும், அமீரகமும் இணைந்து ஆசியாவின் எதிர்காலத்தை வடிவமைக்க முடியும் என்றும், இந்தியா – அமீரகம் இடையே கணக்கிட முடியாத அளவில் விமானங்கள் இயக்கப்படும் நிலையில், இந்திய பிரதமர் ஒருவர் அமீரகம் வருவதற்கு 34 ஆண்டுகள் ஆனதை நினைத்ததாகவும், வெட்கமாக உணர்வதாகவும் கூறினார்.

Leave a Reply