shadow

“என் குரல் பகவான் கொடுத்த வரம்!” -‘கின்னஸ்’ சாதனை புரிந்த பி.சுசீலா
suseela
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழி ரசிகர்களைத் தனது இனிய குரலால் அரை நூற்றாண்டுக்கும் மேலாக கட்டி வைத்திருக்கும் இசையருவி, பின்னணிப் பாடகி பி.சுசீலா. இதுவரை 17,695 பாடல்கள் பாடியிருக்கும் இவரின் சாதனை, இப்போது ‘கின்னஸி’ல் இடம்பிடித்திருக்கிறது. அவர் பேசும்போதும் தேன் குரல் மயக்குகிறது நம்மை..!

‘‘ஐந்து மொழிகளை எப்படிக் கற்றுக்கொண்டீர்கள்..? அந்தந்த மொழியின் இயல்போடு எப்படிப் பாடினீர்கள்..?’’

‘` உண்மையில் எனக்கு தமிழ், தெலுங்கு மட்டும்தான் தெரியும். தெரியாத மொழிகளில் பாட பயிற்சிகள் நிறைய எடுத்துக்கொள்வேன். அதுவே பழகிவிட்டது. தெரியாத மொழிகளிலும் சிறப்பாகப் பாடுவது, இறைவன் அருள் என்றுதான் சொல்வேன்!’’

‘‘உங்கள் காலத்தில் உங்களுக்குப் போட்டியாக நினைத்த பாடகி யார்?’’

‘‘இப்போதுபோல அன்று போட்டிகள் நிறைய இருந்ததில்லை. மேலும், நன்றாகப் பாடும் புதியவர்களுக்கு சீனியர்கள் விட்டுக்கொடுப்பார்கள். நான் போட்டி என்று யாரையும் நினைத்ததில்லை. இப்போதுள்ள பாடகர்கள் மிக அருமையாகப் பாடுகிறார்கள். அவர்களிடம் இருந்து நான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பேன்.’’

‘‘உங்க மருமகள் சந்தியாவும் சினிமாவில் பின்னணிப் பாடகி. அவரின் குரலில் உங்கள் சாயல் இருப்பதாக சொல்வார்களே…’’

‘‘ஆம்… என் மருமகளின் குரல் என் குரல் மாதிரியே இருக்கும். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் சந்தியா பாடியிருக்கிறார். என் குடும்பத்தில் எல்லாருமே பாடுவாங்க. சினிமாவுக்கு வந்தது நானும் என் மருமகளும்தான்.’’

‘‘எங்களுக்கு எல்லாம் உங்களைப் பிடிக்கும். உங்களுக்கு யாரைப் பிடிக்கும்?’’

(பெரிதாகச் சிரிக்கிறார்) ‘‘எனக்கு பாடகர் முகமது ரஃபி பிடிக்கும். மதன் மோகன் மியூசிக் பிடிக்கும்.’’

‘‘50 வருடங்களாக உங்கள் குரல் அப்படியே இருக்கிறது. என்ன ரகசியம்?’’

‘‘இந்தக் குரல் பகவான் கொடுத்த வரம். அவர் நாமத்தை பாடிக்கொண்டே இருப்பேன். அதனால்தான் குரல் அப்படியே இருக்கிறது என்று நினைக்கிறேன்!’’

Leave a Reply