shadow

539246_717396014948368_397118657_n

கண்ணால் பேசும் பயக முன்னே நில்லாதே…என்று, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஒரு பாடலில் கூறுவார். பெண்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் இது. வீட்டிலிருக்கும் பெரியோர் மற்றும் பெற்றவர்கள் ஒரு விஷயம் குறித்து எச்சரிக்கின்றனர் என்றால், அதற்கு ஏதோ காரணம் இருக்கிறது என்பதை, பெண்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அதைவிடுத்து, தர்க்கம் பேசினால், எத்தகைய ஆபத்து நேரிடும் என்பதற்கு வியாசர் சொல்லும் கதையை கேளுங்கள்…

ரைப்யன் – ருக்ம ரேகை என்ற அரச தம்பதிகளுக்கு, ஏகாவலி என்ற பெண் இருந்தாள். அவள், திரபதியைப் போல, யாக அக்னியில் தோன்றியவள். அரசகுமாரியான ஏகாவலியும், மந்திரி குமாரியாகிய யசோவதியும் இணை பிரியாத தோழிகள். அவர்கள் இருவரும், ஒரு காட்டில் இருந்த, தாமரைக்குளத்திற்கு நீராட செல்வது வழக்கம். அது ஆபத்து என்று சொல்லியும், அப்பெண்கள் கேட்கவில்லை. அதனால், அவர்கள் பாதுகாப்பிற்காக, வீரர்களை அனுப்புவார் அரசர். கள்ளன் பெரிதா, காப்பான் பெரிதா என்பார்களே… அதுபோல, ஒரு நாள், வழக்கம் போல் பெற்றோர் சொல்லை மீறி, வனாந்தரத்திற்கு வந்து, குளத்தில் குளித்துக் கும்மாளம் போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, காலகேது என்ற அரக்கன் அப்பெண்கள் இருவரையும், தூக்கி சென்று, சிறையில் அடைத்து விட்டான். அரக்கனுக்கு, அரச குமாரியான ஏகாவலி மீது ஆசை ஏற்பட்டு, திருமணம் செய்ய விரும்பி, அவளை தொந்தரவு செய்தான். யசோவதி, ஒரு சித்த யோகியிடம், அம்பிகையின் மஹாமந்திரத்தை, மூலத்தியானத்தோடு உபதேசம் பெற்றவள்.

அதனால், அம்பிகையின் மந்திரத்தை பக்திப் பூர்வமாக உச்சரித்து, தாயே… எங்களைக் காப்பாற்று… என, வேண்டினாள்.
யசோவதியின் கனவில் அம்பிகை காட்சி தந்து, யசோவதி, துயரப்படாதே… நீ கங்கைக் கரைக்குப் போ. அங்கே லட்சுமி தேவியின் மகனான ஏகவீரன் வருவான். தலை சிறந்த வீரனான அவன், தத்தாத்திரேயரிடம் மஹாமந்திரத்தை உபதேசம் பெற்றவன். அவன் உங்களை இந்த சிறையிலிருந்து விடுவிப்பான். ஏகாவலி அவனையே கணவனாக ஏற்கட்டும்… என்றாள். கனவு கலைந்தது. அம்பிகையின் அருளால், அவர் கூறிய படியே செய்தாள் யசோவதி. அரக்கனைக் கொன்று, அவர்களை விடுதலை செய்தான் ஏகவீரன். அவனுக்கும், ஏகாவலிக்கும் திருமணம் நடந்தது. இத்தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு கிருதவீர்யன் என்று பெயர் சூட்டினர். இந்த கிருதவீர்யன் மகன்தான், கார்த்தவீர்யார்ஜுனன். பரசுராமரால் கொல்லப்பட்ட கார்த்தவீர்யன் இவன் தான். ராமாவதாரத்திற்கு முன் நிகழ்ந்த, பரசுராம அவதார காலத்திற்கு முன்பே, அரக்கன் ஒருவன், பெண்களைப் பலவந்தமாகத் தூக்கிப் போயிருக்கிறான் என்றால்… அரக்க குணம் கொண்டவர்கள் எக்காலத்திலும் உண்டு; அது, இக்காலத்தில் நிரம்ப உண்டு என்பதை பெண்கள் புரிந்து, எப்போதும், ஆண்களிடம் ஒரு எச்சரிக்கை உணர்வோடு பழக வேண்டும். அது அவர்களுக்கும், அவர்களைப் பெற்றவர்களுக்கும் நல்லது!

Leave a Reply