சபரிமலை: பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை நடை வரும் 14ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கிறது. 19ம் தேதி வரை நடை திறந்திருக்கும். அதன் பின்னர் மீண்டும் பங்குனி உத்திர திருவிழாவுக்காக 24ம் தேதி மாலை மீண்டும் நடை திறக்கும். மாசி மாத பூஜைகள் முடிந்து சபரிமலை நடை கடந்த மாதம் 17-ம் தேதி இரவு அடைக்கப்பட்டது. அதன் பின்னர் பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை நடை நாளை மாலை 5.30-க்கு திறக்கிறது. தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். அன்று வேறு எந்த விசேஷ பூஜைகளும் கிடையாது. இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை மறுநாள் முதல் 19-ம் தேதி வரை தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறக்கும். எல்லா நாட்களிலும் காலை 5.15 மணி முதல் பகல் 12 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெறும். எல்லா நாட்களிலும் இரவு 7 மணிக்கு படிபூஜை நடைபெறும். இந்த நாட்களில் உதயாஸ்மனபூஜை, சகரஸ்ரகலச பூஜை, களபபூஜை போன்ற பூஜைகளும் நடைபெறும். 19-ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் திறப்பு:
அதன் பின்னர் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவுக்காக வரும் 24-ம் தேதி மாலை நடை திறக்கிறது. 25-ம் தேதி காலையில் கொடியேற்று விழா நடக்கிறது, தொடர்ந்து விழாவில் தினமும் இரவு ஸ்ரீபூதபலி என்ற நிகழ்ச்சி நடக்கிறது. 26-ம் தேதி இரண்டாம் நாள் விழா முதல் ஏப்., இரண்டாம் தேதி ஒன்பதாம் நாள் விழா வரை தினமும் மதியம் உற்சவபலி நடக்கிறது, ஒன்பதாம் நாள் விழாவில் இரவு சுவாமி பள்ளி வேட்டைக்காக சரங்குத்திக்கு எழுந்தருளுவார். மூன்றாம் தேதி காலை எட்டு மணிக்கு யானை மீது சுவாமி ஆராட்டுக்காக பம்பைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மதியம் பம்பையில் ஆராட்டு நடைபெறும். இரவு ஆராட்டு பவனி சன்னிதானம் வந்ததும் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறும்.
Leave a Reply
You must be logged in to post a comment.