shadow

panchangaliகைரேகை சாஸ்திரம் அல்லது ஹஸ்த சாஸ்திரம் என்பது ஒருவரின் கையிலுள்ள ரேகைகளை வைத்து அவரது குணாதிசயங்கள், கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் பற்றிய விவரங்களைச் சொல்வதாகும். பஞ்சாங்குலி எனும் தேவி இந்த ஹஸ்த சாஸ்திரத்தின் அதி தேவதை என்பதால், இதனைப் ‘பஞ்சாங்குலி சாஸ்திரம்’ என்றும் சொல்கிறார்கள். மேலை நாடுகளில் இதனை ‘Palmistry’ என்பார்கள். இதனை அறிந்து உலகுக்குச் சொன்னவர் ‘சீரோ’ (Cheiro) என்ற கிரேக்க அறிஞர். எனவே, இதை ‘Cheiromancy’, ‘Cheirology’ என்றும் குறிப்பிடுகிறார்கள்.

ரேகை சாஸ்திரத்தின் வரலாறு:

ஜோதிட சாஸ்திரத்தின் ஒரு பிரிவுதான் கைரேகை சாஸ்திரம். இது, சுமார் 6000 வருடங்களுக்கு முன்பே இந்தியாவில் முனிவர் பெருமக்களால் அறியப்பட்டு, உலகுக்கு அருளப்பட்டது என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். வால்மீகி மகரிஷி எழுதிய ‘ஆண்களுக்கான ரேகை சாஸ்திரம்’ என்ற நூலில் கைரேகை சாஸ்திரம் தொடர்பான விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மகாபாரத காலத்தில், பாண்டவர்களில் ஒருவரான சகாதேவன் இந்த சாஸ்திரத்தைப் பரப்பினார். இந்தியாவிலிருந்து இந்த சாஸ்திரம் திபெத், எகிப்து, பெர்ஸியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அறிமுகமானது. ”மனிதனின் கைகளிலுள்ள ரேகைகள் வெறும் கோடுகள் அல்ல; அது அவன் வாழ்க்கை வழிமுறை பற்றி இறைவனால் எழுதப்பட்ட வாசகங்கள்” என்று கூறியுள்ளார் கிரேக்க நாட்டு அறிஞர் அரிஸ்டாடில்.

கி.மு. 350ல் உலகையே வென்ற மாமன்னன் அலெக்ஸாண்டர் இந்த சாஸ்திர அறிவு பெற்றவன் என்பது குறிப்பிடத்தக்கது. தனது ராணுவ வீரர்களைத் தேர்ந்தெடுக்கும்போது தக்க அறிஞர்களைக் கொண்டு வீரர்களின் கைரேகைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்தே முடிவெடுப்பது அலெக்ஸாண்டரின் வழக்கம் என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

19ம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில் கைரேகை சாஸ்திரத்தை நுணுக்கமாக ஆராய்ந்து உலகுக்குச் சொன்ன மேதை சீரோ. இவர் இந்தியாவுக்கு வந்து, கைரேகை சாஸ்திர நிபுணர்களோடு் கலந்துரையாடி, ஆராய்ச்சி செய்து இந்த சாஸ்திரத்தை எளிய முறையில் எல்லோரும் அறியச் செய்தார். கைரேகை சாஸ்திரம் பற்றிக் கற்றுக் கொள்ள விரும்பும் பலரும் படிக்க விரும்பும் நூல் சீரோவின் ரேகை சாஸ்திரம் Cheiro’s palmistry. இவரைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் பல்வேறு அறிஞர்கள் இந்த சாஸ்திரத்தைப் பயின்று, அந்தந்த நாட்டு மக்களின் கலாசாரத்தை அனுசரித்து பலன்கள் சொல்லி வருகிறார்கள்.

ஜோதிட சாஸ்திரம் குறித்து இப்படியும் அப்படியுமாகப் பேசுகிறவர்கள் உண்டு. அதேபோல, ‘கைரேகை சாஸ்திரமும் ஒரு கற்பனைதான். அது வெறும் நிழல்; நிஜம் இல்லை’ என்று சிலர் சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். பிரச்னைகளில் சிக்கிக்கொண்டு தீர்வு காண முடியாத நிலையில் தவிக்கும் பலரும் ஜோதிடர்களையோ கைரேகை நிபுணர்களையோ கலந்து ஆலோசிக்க விரும்புவார்கள். இந்த சாஸ்திரத்தைப் பயின்று பலன் சொல்பவர்கள், தவித்த வாய்க்குத் தண்ணீர் கொடுப்பவர்களைப் போல! தயை, கருணை, அன்பு, சத்தியம் ஆகிய நற்குணங்கள் கொண்டு பலன் சொல்ல வேண்டும். சாஸ்திர ஆதாரம் இல்லாமல் எதையும் தோராயமாகவோ கற்பனையாகவோ சொல்லக் கூடாது. உண்மையையே சொல்ல வேண்டும். அதே நேரம், அதனால் எவரும் பாதிக்கப்படாத வண்ணம் பக்குவமாகக் கூற வேண்டும்.

‘கராக்ரே வஸதே லக்ஷ்மீ
கரமத்யே சரஸ்வதி
கர மூலேது கோவிந்தஹ
பிரபாதே கரதர்சனம்’

என்கிற ஸ்லோகம், நம் உள்ளங்கையில் மறைந்துள்ள தெய்விக சக்தியை விளக்குகிறது. உள்ளங்கையில் மேல் பாகத்தில் லக்ஷ்மியும், நடுப்பாகத்தில் சரஸ்வதியும், கீழ்ப்பகுதியில் மஹாவிஷ்ணுவும் வாசம் செய்கிறார்கள். தினமும் காலை எழுந்ததும், உங்கள் உள்ளங்கைகளைப் பாருங்கள். செல்வத்தைத் தரும் லக்ஷ்மியையும், ஞானத்தைத் தரும் சரஸ்வதியையும், சௌபாக்யம் நல்கிக் காக்கும் விஷ்ணுவையும் தரிசிக்கலாம்.

பஞ்சாங்குலி மந்திரம்

பஞ்சாங்குலி மஹாதேவி
ஸ்ரீசீமாந்தர் ஸாஸனே
அதிஷ்ட்தாத்ரி கரசையாஸெள
சக்தி ஸ்ரீ த்ரிதஷேஷிது
ஓம் நமோ பஞ்சாங்குலி தேவ்யை நமஹ.

கைரேகை சாஸ்திரம் பயில விரும்புபவர்கள் பஞ்சாங்குலி தேவியின் ரூபம் அல்லது யந்திரத்தை பிரதிஷ்டை செய்து, இந்த மந்திரத்தை பக்தியோடு ஜபித்து வழிபட்டு வந்தால், ஹஸ்த சாஸ்திரத்தை சிரத்தையோடு பயிலும் பாக்கியம் கிட்டும்.

குறிப்பு:

ஆண்களுக்கு வலது கைரேகைகளையும், பெண்களுக்கு இடது கைரேகைகளையும் ஆராய்ந்து பலன் சொல்ல வேண்டும் என்பது மரபு. ஆனால், ஒரு கையில் அமைந்த ரேகைப் பலனை அடுத்த கையிலும் காண முடிகிறதா என்று ஆராய்ந்தே பலன் சொல்ல வேண்டும்.

Leave a Reply