shadow

5f05a986-7154-4dbe-8b64-59f943592c9e_S_secvpf

ஒரு காலத்தில் எது தவறு என்று போதிக்கப்பட்டதோ அதுவே இன்று விஞ்ஞானத்தின் துணையோடு நவீனம் என்ற பெயரில் நடக்கிறது. சாதியை தூக்கிப்பிடிக்கும் பலரும் குழந்தைக்காக இந்த நவீன சிகிச்சைகளை மேற்கொள்கிறார்கள். வேறு இனத்தில் திருமணம் செய்வதை ஏற்காதவர்கள் கூட இன்று முன்பின் தெரியாதா யாரோ ஒருவருடைய உயிரணுவை அல்லது கருமுட்டையை தங்களின் வாரிசாக சுமக்கிறார்கள்.

ரத்த தானம், கண் தானம் வரிசையில் இன்று கருமுட்டை தானமும், விந்து தானமும் சேர்ந்து கொண்டன. ஒரு ஆண் தன் மனைவியை தாய்மை அடைய வைக்க முடியவில்லை என்ற சூழல் வரும் போது விந்து தானம் மூலம் மற்றோர் ஆணின் உயிரணு அந்த பெண்ணின் கர்ப்பப் பையில் சேர்க்கப்பட்டு வளர்க்கப்படுகிறது. இதற்காக மரபு ரீதியான குறைபாடு இல்லாத, பரம்பரை நோய்கள் இல்லாத உயிரணுக்களின் எண்ணிக்கை கூடுதலாக உள்ள ஆணிடம் இருந்து விந்து சேகரித்து பாதுகாக்கப்படுகிறது.

போர்க்களத்தில் பணிபுரியும் ராணுவ வீரர்கள், பூச்சிக்கொல்லி, கதிர்வீச்சு போன்றவை அதிகம் பாதிக்கும் இடத்தில் வேலை செய்யும் ஆண்களும் தங்கள் விந்தை விந்து வங்கியில் சேமித்து வைத்து தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்கிறார்கள். விந்து தானம் சுலபமானது. ஒரு ஆண் எத்தனை முறை வேண்டுமானாலும் தானம் செய்யலாம். ஒருமுறை தானத்திற்கு ரூ.500ல் இருந்து ரூ.2 ஆயிரம் வரை கொடுக்கிறார்கள். இதுவே பெண்ணின் கருமுட்டைக்கு விலை அதிகம். அதற்கு ரூ.40,000 முதல் 60,000 வரை கொடுக்கிறார்கள்.

ஆனால், பெண்ணின் கருமுட்டை தானம் அத்தனை சுலபமில்லை. கருமுட்டை தானமாக வழங்கும் பெண் 21 வயதில் இருந்து 32 வயதுக்குள் இருக்க வேண்டும். ஒன்று இரண்டு ஆரோக்கியமான குழந்தைகளை பெற்ற பெண்ணாக இருக்க வேண்டும். எந்த நோயும் இருக்கக்கூடாது. கருமுட்டை உற்பத்திக்கான ஹார்மோன் ஊசி போடப்படும். அதை தாங்கும் உடல் நலம் வேண்டும். கருமுட்டை எடுப்பதற்காக நடத்தப்படும் அறுவை சிகிச்சை, மயக்க மருந்து போன்றவற்றை ஏற்றுக்கொள்ளும் திறனும் இருக்க வேண்டும்.

இந்தியாவில் 1986-ம் ஆண்டுக்கு பிறகுதான் கருமுட்டை தானம் என்பது பிரபலம் ஆனது. கருமுட்டை தானம் செய்வது தொடர்பாக சட்ட விதிமுறைகள் எதுவும் இல்லை என்றாலும் கூட ஒரு பெண் 6 தடவைக்கு மேல் கருமுட்டை தானம் செய்வது அவரது உடலுக்கு நல்லது அல்ல என்றும், ஒரு முறை தானம் செய்வதற்கும், அடுத்த முறைக்கும் குறைந்தபட்சம் 6 மாதங்களாவது இடைவெளி இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் சொல்கிறார்கள். அடிக்கடி கருமுட்டை தானம் செய்யும் பெண்களுக்கு கருப்பை புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது.

கருமுட்டைகள் பெண் உடலில் இருந்து எடுக்கப்படும் போது அது 37 டிகிரி சென்டி கிரேட் வெப்பத்தில் இருக்கும். அதை ‘0’ டிகிரிக்கும் கீழே கொண்டு வந்து ‘மைனஸ் 194’ சென்டிகிரேடுக்கு மாற்றி திரவ நைட்ரஜனில் உறைய வைக்கிறார்கள். இதை ‘கிரையோலாஜிக்’ என்ற நவீன கருவியில் வைத்து எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் பாதுகாத்து, பயன்படுத்தலாம். வருங்காலத்தில் மலட்டுத்தன்மை அதிகரிக்கும் அபாயம் இருப்பதால், வீரியம் மிக்க ஆணுக்கும், பெண்ணுக்கும் மதிப்பு கூடும் என்று இப்போதே மருத்துவத்துறை கணித்து வைத்திருக்கிறது.

Leave a Reply