மூன்றே குண்டுகளில் உலகை அழித்துவிடுவோம்: சவால்விடும் வடகொரியா
வடகொரியாவின் தொடர்ச்சியான அணுகுண்டு சோதனையால் ஆத்திரம் அடைந்துள்ள அமெரிக்கா, அந்நாட்டின் மீது படையெடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறப்படினும் இந்த போர் நடக்காது என்றே பலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஏனெனில் முன்புபோல் போர் என்பது பீரங்கி மற்றும் துப்பாக்கி குண்டுகளால் இனி ஏற்படுவதில்லை. இனியொரு போர் நடந்தால் உலகம் அழிந்துவிடும் வகையில் அணுகுண்டு தான் பயன்படுத்தப்படும் என தெரிகிறது
இந்த நிலையில் மூன்று குண்டுகளில் உலகையே வடகொரியா அழித்துவிடும் என்று அந்நாட்டின் சிறப்பு தூதர் என அழைக்கப்படும் அல்ஜென்ரோ பெனோஸ் கூறியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஸ்பெயினைச் சேர்ந்த அல்ஜென்ரோ பெனோஸ் என்ற சமூக ஆர்வலர் வடகொரியாவுக்காக மேற்கத்திய நாடுகளுடன் கலாச்சார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் உறவு வைத்திருக்கும் சிறப்பு தூதராக அறியப்படுகிறார்.
இந்த நிலையில் அர்ஜெண்டினா நாட்டின் தொலைகாட்சிக்கு கொரிய தீபகற்ப பகுதியில் நிலவும் போர் பதற்றம் குறித்து அல்ஜென்ரோ பெனோஸ் பேசும்போது, “வடகொரியாவை யாரும் நெருங்க முடியாது. அவ்வாறு நெருங்க முயன்றால் வடகொரியா துப்பாக்கிகள் மற்றும் ஏவுகணைகள் கொண்டு தன்னை வடகொரியா பாதுகாத்து கொள்ளும். வடகொரியாவால் மூன்றே குண்டுகளில் உலகையே அழித்துவிட முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
வடகொரியாவின் தொடர் அணு ஆயுத ஏவுகணை சோதனைகள் காரணமாக தொடர்ந்து கொரிய தீபகற்ப பகுதியில் போர் பதற்ற சூழல் நிலவி வருகிறது.
அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் கார்ல் வின்சன் போர்க்கப்பல் கொரிய தீபகற்பத்தில் முகாமிட்டுள்ளது. அந்த கப்பலை ஏவுகணை வீசி மூழ்கடிப்போம், எங்கள் மீது போர் தொடுத்தால் அணுஆயுத தாக்குதல் நடத்தவும் தயங்க மாட்டோம் என்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் மிரட்டல் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.