மீண்டும் ஒரு கூவத்தூரா? தமிழ்நாடு தாங்காது: தமிழிசை செளந்திரராஜன்
திகார் சிறையில் இருந்து திரும்பி வந்த டிடிவி தினகரன், பெங்களூர் சென்று சசிகலாவை சந்தித்த பின்னர் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளால் தமிழக அரசு ஆட்டம் கண்டுள்ளது. 122 எம்.எல்.ஏக்களுடன் ஆட்சி புரிந்து வரும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, தற்போது சுமார் 30 எம்.எல்.ஏக்களை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆம், தினகரனுக்கு சுமார் 30 எம்.எல்.ஏக்கள் ஆதரவளித்துள்ளனர். மேலும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அனைவரும் பத்திரமாக அவருடைய வீட்டிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், அந்த அணியில் இவ்வளவு எம்.எல்.ஏ., இந்த அணியில் இவ்வளவு எம்.எல்.ஏ. என்று தினமும் செய்திகள் வருகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது இன்னும் ஒரு கூவத்தூர் ஆரம்பமாகிவிடுமோ என்று பயமாக உள்ளது.
கடந்த 6 மாதமாக ஒரு நிலையற்ற தன்மையே தமிழகத்தில் நிலவுகிறது. எடப்பாடி பழனிச்சாமி தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இருக்கின்ற எம்.எல்.ஏ.க்களை பிடித்து வைத்துக் கொள்ளவில்லை என்றால் தேவையில்லாமல் தேர்தலை சந்திக்க வேண்டிவரும். அது யாருக்குமே நல்லதல்ல.
இந்த நிலையற்ற தன்மையைப் பார்க்கும்போது முதலில் உள்ளாட்சித் தேர்தல் வருமா? அல்லது சட்டமன்றத் தேர்தல் வருமா? என்று தெரியவில்லை. ஏதோ ஒரு தேர்தல் சந்திக்கப் போகிறோம் என்பது மட்டும் எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது” என்று தமிழிசை கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.