shadow

shadow

கேரள மக்களின் பிரதான பண்டிகையான ஓணம், இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஜாதி, மத பாகுபாடின்றி மலையாள மொழி பேசும்  அனைவருக்கும், விருப்பமான பண்டிகை, ஓணம். மலையாள மாதமான, சிங்கம் மாதத்தில், அஸ்த நட்சத்திர நாளில் துவங்கி, திருவோண  நட்சத்திரம் வரை, 10 நாட்களும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நட்சத்திரத்தின்  பெயரில் கொண்டாடப்படுகிறது. இந்த பத்து நாட்களிலும்,  வாசலில், பல்வேறு வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிடுவர். திருவோண நாளில், அதிகாலையில் எழுந்து நீராடி, புத்தாடைகள் அணிந்து,  வாசலில் அத்தப்பூ கோலமிட்டு, மகாபலி சக்ரவர்த்தியை வரவேற்க ஆயத்தமாகின்றனர். ஓணம் திருவிழா, கேரள மாநிலத்தின் அறுவடை திரு நாளாகவும் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையை ஒட்டி வஞ்சிப்பாடல் பாடியபடி படகு போட்டி நடத்தப்படுகிறது.  இதுதவிர, பல்வேறு  விளையாட்டுகளும், இவ்விழாவை களை கட்டச் செய்கிறது.ஓணம் பண்டிகையின் மற்றொரு முக்கிய அம்சம், ‘ஓணம் சத்ய’  எனப்படும், அறுசுவை  விருந்தாகும். நாவுக்கு சுவையாக அடை பிரதமன், அடை அவியல், ஓலன், ரசம், மோர் தோரன், கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய்  அவியல், பரங்கிக்காய் குளம்பு, பப்படம் போன்றவை, இதில் இடம் பெற்றிருக்கும். ஓணம் விருந்தில், கசப்பு சுவை இடம் பெறாது; தேங்காய்க்கும்,  தயிருக்கும் முக்கியத்துவம் இருக்கும். மலையாள மக்களின் பண்டிகையாக இருந்தாலும், கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழக மாவட்ட ங்களையும், ஓணம் பண்டிகை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்துகிறது.

Leave a Reply