shadow

shadow

ஷியா முஸ்லிம்களுக்கு எதிராக அதிரடி தாக்குதல்கள் நடத்தி வரும் சன்னி முஸ்லீம் தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் இருப்பிடங்களை வான்வழியில் இருந்து தாக்குவதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார். இதனால் உலக அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதல் தாக்குதல் நேற்று மாலை நடத்தப்பட்டதால் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஈராக் அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க அமெரிக்கா இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக கூறும் ஒபாமா, சிறுபான்மை இனத்தவர்களை குறிவைத்து தாக்கப்படும்போது அமெரிக்கா வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்று கூறியுள்ளார்.

நேற்று மாலை குர்தீஷ் படைகள் மீது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பீரங்கி தாக்குதல் நடத்திய சில நிமிடங்களில் அமெரிக்காவின் ‘எப்.ஏ. 18’ போர் விமானங்கள், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் மீது சுமார் 225 கிலோ எடை கொண்ட ராட்சத குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

இந்த தகவலை அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் உறுதிப்படுத்தியுள்ளது. பெண்டகன் செய்தி தொடர்பாளர் ரியர் அட்மிரல் ஜான் கிர்பை இதுகுறித்து விடுத்த அறிக்கை ஒன்றில், “ஈராக்கின் எர்பில் நகரை பாதுகாத்து வருகிற குர்தீஷ் படைகள் மீது பீரங்கி தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க போர் விமானங்கள் தாக்குதலை தொடங்கி உள்ளன” என கூறி உள்ளார்.

அமெரிக்க ராணுவம் தீவிரவாதிகள் மீது தாக்குதலை தொடங்கி உள்ளதால், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக்கின் முக்கிய நகரங்களை நோக்கி முன்னேறி வந்தது தடைபட்டுள்ளது. இதனால் ஈராக் அரசு தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளது. ஆனால் அமெரிக்காவின் இந்த தாக்குதல் காரணமாக இந்திய பங்குச்சந்தை பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

Leave a Reply