shadow

லாபம் கிடைத்தால் மட்டுமே சம்பள உயர்வு. பி.எஸ்.என்.எல் தலைவர் அதிரடி அறிவிப்பு

bsnlஐ.டி. நிறுவனங்கள் உள்பட பல தனியார் நிறுவனங்களில் லாபம் வந்தால் மட்டுமே அதன் ஊழியர்களுக்கு சம்பள உயர்வும் பிற சலுகைகளும் வழங்கப்படும். இல்லையேல் வருடக்கணக்கில் ஒரே சம்பளத்திலோ அல்லது வேலை இழக்கும் அபாயமோ தனியார் நிறுவனங்களில் இருந்து வரும் நிலையில் அரசு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனமும்  லாபம் கிடைக்கவில்லை என்றால் அடுத்த ஆண்டு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடையாது என அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் பி.எஸ்.என்.எல்.-ன் மொபைல் டேட்டா ஆப்லோடு வசதி தொடக்க விழாவில் கலந்து கொண்ட பி.எஸ்.என்.எல் நிறுவனத் தலைவரும், இயக்குநருமான ஸ்ரீவத்சவா பேசியபோது, ”பி.எஸ்.என்.எல். வரலாற்றில் இந்த ஆண்டு மிகவும் சவால்கள் நிறைந்த ஆண்டாகும். அடுத்த ஆண்டு (2017) என்பது மூன்றாவது முறையாக சம்பள மறுஆய்வு கமிட்டி மூலம் ஊழியர்களின் சம்பளத்தை மறுஆய்வு செய்வதற்கான ஆண்டு. ஆனால், நமது நிறுவனத்துக்கு லாபம் கிடைக்கவில்லை என்றால், ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட மாட்டாது. இதேபோல், ஏர் இந்தியா நிறுவனத்திலும் இதற்கு முன்பு நடந்திருக்கிறது.

எனவே, அடுத்த ஆண்டு (2017) மிக முக்கியமான ஆண்டாகும் இந்த ஆண்டு நமது லாப நஷ்டக் கணக்கை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். நிறுவனத்தை வருமானப் பாதையில் கொண்டு செல்வதே ஊழியர்களின் முதன்மைப் பணியாக இருக்க வேண்டம். இருக்கையில் அமர்ந்து கொண்டு கோப்புகளில் கையெழுத்திட்டு சென்ற நாட்கள் முடிந்து விட்டது. வருவாய் மட்டுமே இனி நமது முதல் இலக்கு” என்று கூறினார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர் நஷ்டத்தில் இயங்கி வந்த பி.எஸ்.என்.எல். நிறுவனம் கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.672 கோடி லாபம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply