shadow

கார் ஓட்டி கொண்டே செல்போன் பேசுவது குற்றமா? கேரள ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

கார் ஓட்டிக்கொண்டே செல்போனில் பேசுவது குற்றமாகாது என்றும் அதே நேரத்தில் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலோ அல்லது விபத்தை ஏற்படுத்தவோ இல்லாத வகையில் கார் ஓட்ட வேண்டும் என்று கேரள ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

இந்தியா முழுவதும் வாகனம் ஓட்டிக்கொண்டே செல்போன் பேசுவது சட்டப்படி குற்றம் என்று கூறப்பட்டு அதற்கு அபராத தொகையும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த சந்தோஷ் என்பவர் செல்போனில் பேசியவாறு கார் ஓட்டி போலீசாரிடம் பிடிபட்டார். அவர் மீது கேரள போலீஸ் சட்டம் 118 (இ)-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டின் ஒரு நீதிபதி அமர்வு, செல்போனில் பேசியவாறு கார் ஓட்டுவது தண்டனைக்குரிய குற்றம் என கடந்த 2014-ம் ஆண்டு அறிவித்தார்.

இதை எதிர்த்து 2 நீதிபதிகள் அமர்வில் அவர் மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள் ஏ.எம்.ஷபிக், பி.சோமராஜன் ஆகியோரை கொண்ட அமர்வு, செல்போனில் பேசியவாறு வாகனம் ஓட்டுவது தண்டனைக்குரிய குற்றமல்ல எனக்கூறி ஒரு நீதிபதி அமர்வின் தீர்ப்பை ரத்து செய்தனர்.

பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலோ அல்லது விபத்தை ஏற்படுத்தவோ இல்லாத பட்சத்தில், செல்போனில் பேசியவாறு கார் ஓட்டுவது குற்றமல்ல என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறினர். இது கேரள போலீஸ் சட்டம் 118 (இ)-ன் கீழ் வராது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

Leave a Reply