ஜாதிக்காய், மாசிக்காய் இவை இரண்டுமே மருத்துவ குணங்களும், அழகை வாரி வழங்கும் வள்ளல் தன்மையும் கொண்டவை என்றாலும் அழகைப் பொறுத்தவரை தனித்தனியாக இவற்றைப் பயன்படுத்தினால் பலனில்லை. இரண்டும் இணைந்தாலோ அபரிமிதமான அழகைத் தரும்.

• ஜாதிக்காய், மாசிக்காய் இரண்டையும் எடுத்து லேசாக நீர் தெளித்து, சந்தனக் கல்லில் ஐந்து சுற்று இழையுங்கள். பிறகு, அதனை எடுத்து ஒரு சிட்டிகை துளசி பவுடரை சேர்த்துக் கலக்குங்கள். பரு உள்ளவர்கள் இந்த பேஸ்ட்டை பருக்கள் மீது வைத்தால் போதும். பரு விரைவில் காய்ந்து உதிரும். வடு தங்காது. முக்கியமாக பருவால் உண்டாகும் வலி வரவே வராது.

• ஜாதிக்காய் 1,
மாசிக்காய் 1,
கிராம்பு 2

இவற்றை ஒரு கல்லில் லேசாகத் தட்டி, பிறகு மிக்ஸியில் போட்டு ரவை போல பொடித்துக் கொள்ளுங்கள். இதற்கு `ஹெர்பல் பேஷியல் ஸ்க்ரப்’ என்று பெயர்.  முகத்தை வெந்நீரால் சுத்தமாகக் கழுவி, துடைத்து விட்டு இந்த பவுடரைப் பூசி, தேய்த்துக் கழுவுங்கள்.

முகம் மெருகு கூடி, புத்துணர்ச்சி அடைவதை கண்கூடாகக் காணலாம், விசேஷ நிகழ்ச்சிகளுக்குப் போகும்போது இதனை செய்யுங்கள்.. பியூட்டி பார்லர் போக வேண்டாம். ப்ளீச், பேஷியலும் செய்ய வேண்டாம். ஆனாலும் உங்கள் முகம் பிரகாசிக்கும்.

• திடீர் பேஷியலில் இது மற்றொரு வகை… 1. ஜாதிக்காய், 1 மாசிக்காய்…. இவற்றை நைஸாகப் பொடித்து, 1 டீஸ்பூன் சந்தனத் தூளைக் கலந்து வையுங்கள். அரைக்கால் கப் (25 மி.லி) தண்ணீரை சூடாக்கி, அது கொதிக்கும் போது ஒரு சிறு துண்டு பட்டையை அதில் போட்டு, பாத்திரத்தை மூடி, அடுப்பை அணைத்து விடுங்கள்.

ஒரு மணி நேரம் அப்படியே விடவேண்டும். பிறகு, ஆறியிருக்கும் அந்த நீரில் ஜாதிக்காய், சந்தனப் பொடிக் கலவையைக் கலந்து முகத்தில் பூசி பத்து நிமிடங்கள் விட்டு (ரொம்பவும் காயக்கூடாது) குளிர்ந்த நீரால் (ஐஸ் தண்ணீர் அல்ல) கழுவுங்கள். டல்லடித்த முகம் பட்டையின் கைங்கர்யத்தால் பளிச்சென்று ஆகிவிடும்.

• முதுமை நெருங்க நெருங்க முகத்தின் இளமை தொலைவதை தவிர்க்க முடியாது தான். ஆனால், முடிந்தவரை தள்ளிப்போடலாம். அந்த வேலையைச் செய்யக் காத்திருக்கிறது பட்டை. 1 பட்டையை எடுத்து, அது மூழ்கும் அளவு வெந்நீர் ஊற்றி ஓர் இரவு முழுவதும் ஊறவையுங்கள்.

மறுநாள் அதனை அம்மியில் வைத்து நைஸாக அரைத்து, அதனுடன் சிறிதளவு பால் ஏடு அல்லது தயிர் கலந்து முகத்தில் பூசுங்கள், தினசரி அல்லது வாரம் இரு முறை இதனை செய்துவர, தளர்ந்த சதை இறுகும். முக்கியமாக கண்களுக்குக் கீழே பை போன்ற சதை தளர்ந்திருப்பவர்கள் அந்த இடத்தில் இந்தக் கலவையைப் பூசி வந்தால் எளிதில் மாற்றத்தைக் காணலாம்.

Leave a Reply