உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முக்கிய போட்டியாக இன்று நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி படுதோல்வி அடைந்துள்ளது. ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு இங்கிலாந்து தடைபோடும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் எண்ணியிருந்த நிலையில் அந்த அணி மொத்தமாக சரண்டர் ஆனதால் இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. ஆனால் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் படுசொதப்பலாக ஆடியதால் 33.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 123 ரன்களை மட்டுமே எடுத்தனர். ரூட் மட்டும் ஓரளவு நிலைத்து ஆடி 46 ரன்கள் எடுத்தார். நியூசிலந்தின் செளத்தி அபாரமாக பந்துவீசி 7 விக்கெட்டுக்களை சாய்த்தார்.
124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி வெறும் 12.2 ஓவர்களில் 125 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது. நியூசிலாந்து பேட்ஸ்மேன் மெக்கல்லமின் பேட் இன்று ருத்ரதாண்டவம் ஆடியது. அவர் 25 பந்துகளில் 77 ரன்கள் அடித்தார். அதில் 8 பவுண்டர்களும், 7 சிக்சர்களும் அடங்கும். நியூசிலாந்து பந்துவீச்சாளர் செளத்தி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 6 புள்ளிகள் எடுத்து முதலிடத்தில் உள்ளது.
இதற்கு முன் கடந்த 2003ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் தென்ஆப்ரிக்க அணி வங்கதேச அணி எடுத்திருந்த 109 ரன்களை 12 ஒவர்களில் எட்டியதுதான் உலக சாதனையாக இருந்தது. அந்த சாதனையை நியூசிலாந்து முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நியூசிலாந்து அணி 2 பந்துகள் அதிகமாக எடுத்துக் கொண்டதால் அந்த சாதனையை நியூசிலாந்து கோட்டை விட்டது.
Leave a Reply
You must be logged in to post a comment.