shadow

புதிய ரேசன் கார்டு வாங்க இனி ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்

ration-cardபுதிய ரேஷன் கார்டுகளை விண்ணப்பிக்கவும், பழைய ரேஷன் கார்டில் திருத்தங்களை மேற்கொள்ளவும் மற்றும் புகார்களை ஆன்லைன் மூலமாக தெரிவிக்கும் வகையில் தமிழக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இணையத்தளம் வரும் தீபாவளி முதல் முழு பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலை:

தமிழக மக்களுக்கு பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை உள்ளிட்ட மற்ற பிற அடையாள அட்டைகளை விண்ணப்பித்து பெறுவதை விட புதிய ரேஷன் கார்டை பெறுவது என்பது மிகவும் சவாலானது. புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 60 நாட்களில் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட வேண்டும் என்பது நடைமுறையில் உள்ள விதி. ஆனால் விண்ணப்பித்து பல மாதங்கள், ஆண்டுகள் காத்திருந்தும் ரேஷன் கார்டுகள் கிடைக்காத நிலை தற்போது நிலவி வருகிறது. ஊழியர்கள் பற்றாற்குறை, ஆவணங்களை சரிபார்ப்பதில் உள்ள சிக்கல், அரசாங்கத்தின் ஸ்மார்ட் கார்டு போன்ற புதிய திட்டங்களால் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

எப்படி ஆன்லைனில் விண்ணப்பிப்பது?:

வேகமான சேவை மற்றும் வெளிப்படைத்தன்மை போன்றவற்றின் காரணமாக அரசின் பல்வேறு சேவைகள் ஆன்லைனுக்கு மாறி வரும் இக்காலத்தில் தமிழக அரசின் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையானது //tnpds.com/ என்னும் இணையதளத்தை மேம்படுத்தி வருகிறது. அதன்மூலம் புதிய ரேஷன் கார்டுகளை விண்ணப்பிக்கவும், பழைய ரேஷன் கார்டில் திருத்தங்களை மேற்கொள்ளவும் மற்றும் புகார்களை பதிவு செய்யும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

புதிய ரேஷன் கார்டு பெற விரும்புவோர் மேற்கண்ட இணையதளத்துக்குச் சென்று “புதிய அட்டை விண்ணப்பிக்க” என்பதை தெரிவு செய்யவேண்டும். உடனடியாக திறக்கும் அடுத்த இணைய பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர், பாலினம், வயது, முகவரி, தொழில், மாத வருமானம் போன்ற பல்வேறு தகவல்களையும் உங்கள் ஆதார் அட்டை எண், ஏதாவதொரு குடியிருப்பு சான்று, எரிவாயு இணைப்பு குறித்த விவரங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆவணங்களை ஸ்கேன் செய்து இரண்டு MBக்கும் குறைவான அளவில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதில் மிக முக்கியமானது உங்கள் கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளே ஆகும். ஏனெனில் நீங்கள் உங்களை பற்றிய விவரங்களை பதிவேற்றிய பின் ஒரு குறிப்பு எண்ணானது உங்கள் கைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். உங்கள் விண்ணப்பம் குறித்த நிலையை எதிர்காலத்தில் அறிந்து கொள்வதற்கு இந்த எண் மிகவும் அவசியமானது ஆகும்.

Leave a Reply