shadow

kidney_2258694f

சிறுநீர் மார்க்கத்தில் அழற்சி என்பது மருத்துவத் துறையில் பொதுவாகக் காணப்படும் ஒரு குறியீடு. மூத்திரப் பையிலோ (Bladder), சிறுநீரகத்திலோ (kidney) இது ஏற்படலாம். மூத்திரம் வரும் பாதையிலும் அழற்சி ஏற்படலாம். சில நேரம் மூத்திரப் பையிலும் அழற்சி ஏற்படலாம். இதை cystitis என்று சொல்வார்கள். இந்த அழற்சி கிருமி தொற்று மேலே சென்று சிறுநீரகத்தைத் தாக்கும்போது அதை pyelonephritis என்று சொல்வார்கள்.

இம்மாதிரி உள்ள நிலையில் சிறுநீர் போகும்போது வலி ஏற்படும் அல்லது அதிகமாகப் போக வேண்டும் என்றும், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படும். காய்ச்சல் இருக்கும், இடுப்பின் இரு பகுதிகளிலும் வலி காணப்படும். பொதுவாக e-coli என்ற ஒரு வகை பாக்டீரியாவால் இது வருகிறது.பெண்களுக்கு அதிகம் வருகிறது. சிலருக்கு அடிக்கடி வரலாம். அடிக்கடி உடல் உறவில் ஈடுபடுதலும் இதற்குக் காரணம்.

எந்த வகை பிரச்சினை?

குறியீடுகளை வைத்தே இதைக் கண்டுபிடித்து விடலாம். ஒரு சில நேரம் சிறுநீர் பரிசோதனை செய்து எந்த வகை பாக்டீரியா என்று கண்டுபிடித்து நவீன மருத்துவத்தில் ஆன்ட்டிபயாட்டிக் கொடுப்பார்கள். சில நேரம் இந்த ஆன்ட்டிபயாட்டிக் வேலை செய்வதில்லை. அப்போது அசுத்த ரத்தக்குழாய் வழியாக மருந்தை ஊசியின் மூலம் செலுத்துவார்கள்.

மேலும் சில பரிசோதனைகள் உண்டு. கர்ப்பிணிப் பெண்களும் கவனமாக இருக்க வேண்டும். சிலருக்கு மூத்திரத்தில் பழுப்பு வரலாம். இதை pyuria என்று சொல்வார்கள். பெண்கள் தொப்புளுக்குக் கீழே வலிக்கிறது என்று சொல்வார்கள். இந்த அழற்சி மேலே சிறுநீரகத்துக்குப் போகும்போது வாந்திகூட ஏற்படலாம்.

பரிசோதனைகள்

சிறு குழந்தைகளுக்கு இது வரும் போது காய்ச்சல் காணப்படும். வயதானவர்களுக்கு இது பெரிய பிரச்சினை. அறியாமலே சில நேரங்களில் சிறுநீர் கழியும், அசதியும் தோன்றும். திருமணம் ஆன பின் வரும் மூத்திர அழற்சியை (honeymoon cystitis) என்று அழைப்பார்கள். பெண்களின் மூத்திர குழாய் சிறியது. அது ஆசனவாய்க்கு அருகே உள்ளது. மாதவிடாய் சமயத்தில் பெண் ஹார்மோன் என்ற ஈஸ்ட்ரோஜன் குறையும்போது மூத்திர அழற்சியும் அதிகரிக்கிறது.

மைக்ராஸ்கோப்பில் சிறுநீரை வைத்து வெள்ளை அணுக்களைப் பார்ப்பதும், சிவப்பணுகள் இருக்கிறதா என்று பார்ப்பதும் நடைமுறையில் உள்ள வழக்கம். நீரிழிவு நோயாளிகளும், கர்ப்பிணிகளும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிறுநீரைப் பரிசோதிக்கச் சொல்லும்போது முதலில் சிறிது சிறுநீரைக் கழித்துவிட்டு, பின்பு சுத்தமான பாட்டிலில் அதைப் பிடிக்க வேண்டும். கற்கள் இருக்கின்றனவா என்பதை ultra sound மூலம் நவீன மருத்துவர்கள் தெரிந்துகொள்வார்கள்.

பெண்களுக்குப் பெண்ணுறுப்புப் பகுதியில் புண் உள்ளதா என்பதையும் பார்க்க வேண்டும். ரத்தம் அதிகமாகப் போனால் வேறு நோய்கள் உள்ளனவா என்றும் ஆராய வேண்டும். சுகாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆயுர்வேத மருந்துகள்

ஆயுர்வேதத்தில் மூத்திரத்தைக் கபத்தின் அம்சமாகக் கருதுவார்கள். மூத்திர அழற்சி என்பது சாம மூத்திரம் எனப்படும். இங்கு ஆமத் தன்மையுடைய கபம் சிறுநீரைத் தாக்கும். அதனால் கசப்பு, துவர்ப்புச் சுவையுடைய மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.

# இதற்குப் புல் வகைகளான திருண பஞ்ச மூலம் என்று சொல்லக்கூடிய தர்ப்பை, நாணல், குசம், கரும்பு ஆகியவற்றின் வேர்களின் கஷாயத்தில் சந்திரபிரபா என்கிற மாத்திரையைச் சேர்த்துச் சாப்பிடலாம்.

# நெல்லிக்காய் பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றை இளநீரில் சேர்த்துச் சாப்பிடலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு இளநீர் ஆகாது.

# தேற்றான் கொட்டை கஷாயம் மிகவும் சிறந்தது.

# ஆல், அரசு, அத்தி, இத்தி ஆகியவற்றின் கஷாயத்தைச் சிவா மாத்திரையுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

# நெருஞ்சி முள், தண்ணீர்விட்டான் கிழங்கு ஆகியவற்றைத் தண்ணீரில் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டி ஒரு பாட்டிலில் நிறைத்து அடிக்கடி குடித்து வந்தால் பழுப்பணுக்கள் வெளியேறும்.

# முதல் நாள் இரவு தண்ணீரில் உளுந்தை ஊற வைத்து மறுநாள் காலை அந்தத் தண்ணீரை மட்டும் குடிக்கச் சிறுநீர் எரிச்சல், சுருக்கு நீங்கும்.

# பரங்கி விதை 4-8 வரை எடுத்துக் கஷாயம் வைத்துச் சாப்பிடச் சிறுநீரக அழற்சி தணியும்.

# மாதுளம் பழத்தின் மணிகளின் சாற்றை உறிஞ்சிவிட்டு விதையையும் மென்று சாப்பிடுவது நீர்க்கடுப்பைக் குறைக்கும்.

# விளாமிச்சை அல்லது வெட்டிவேரை முடித்துக் கட்டி போட்டு நீர்ப் பானைகளில் ஊற வைக்கவும். இத்தண்ணீரைப் பருக உடல் எரிச்சல், சிறுநீர் எரிச்சல் நீங்கும்.

# வாழைத் தண்டின் நீரைப் பருக நீர்ச் சுருக்கு, நீர் கல்லடைப்பு, சிறுநீரக அழற்சி, எலும்புருக்கி ஆகியவற்றிலிருந்து குணம் கிடைக்கும்.

# கீரை வகைகளில் பசலைக் கீரை நீர் சுருக்கு, நீர்க் கடுப்பு நீங்க மிகவும் நல்லது. அது போலவே முளைக்கீரை, தண்டுக்கீரை, சிறுகீரை, பருப்புக்கீரை, புதினா போன்றவை நீர்க்கடுப்பை நீக்கக் கூடியவை.

# சிறுநீர் எரிச்சல் நீங்க சீரகத்தையும், கற்கண்டையும் சுவைத்துச் சாப்பிடுதல் நல்ல பயன் தரும்.

Leave a Reply