பெருமாளை வணங்குபவர்கள் நெற்றியில் திருநாமம் இடுகின்றனர். இந்த நாமக்கட்டி பூமிக்கு வந்த வரலாறு தெரியுமா?
வேதகால மகரிஷியான கஷ்யபருக்கும், அவரது துணைவி விநதைக்கும் பிறந்தவர் கருடன். தன் அன்னையின் பெயரால் வைநதேயன் என அழைக்கப் பட்டார். ஒருசமயம், விநதை தன் சக்களத்திக்கு அடிமையாக வேண்டிய சூழல் ஏற்பட்டது. அடிமைத்தளை தீர வேண்டுமானால், தேவலோகம் சென்று அமுதக்கலசத்தைக் கொண்டு வரவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானார் கருடன். இந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்று, அன்னையை விடுவித்தார். இவரது அசாத்திய வலிமை கண்ட விஷ்ணு, இவரைத் தனக்கு வாகனமாக்கிக் கொண்டார். ஸ்ரீவைகுண்டத்தில் இருந்த கிரீடாசலத்தை பூலோகத்திற்கு கொண்டு வந்து திருப்பதி ஏழுமலையை உருவாக்கியவர் கருடன். அதில் கருடனின் பெயரால் கருடாத்ரி என்றொரு மலையும் உண்டு. ராவணனின் மகனான இந்திரஜித், லட்சுமணன் மீது நாகபாசத்தைத் தொடுத்தான். லட்சுமணன் அதில் கட்டுண்டு கிடந்தபோது, கருடன் அவரைக் காப்பாற்றினார். திருப்பாற்கடலின் மத்தியிலுள்ள சுவேதத் தீவிலிருந்த பாற்கட்டிகளை பூலோகத்திற்கு கொண்டு வந்ததும் கருடனே! இந்தக்கட்டியே சுவேதமிருத்திகை என்னும் நாமக்கட்டியாக பயன்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.