shadow

201601070051073425_Nakanatar-Temple-Rakupeyarcci-Festival-Tomorrow-Going_SECVPF

நாகூர் நாகநாதர் கோவிலில் ராகுபெயர்ச்சி விழா  (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

ராகுபெயர்ச்சி

நாகையை அடுத்த நாகூரில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறந்த திருநாகவல்லி, நாகநாதர் கோவில் அமைந்துள்ளது. பிரம்மன், சந்திரன், துருவாச முனிவர், சப்தரிஷிகள், சமுத்திரராஜன், உருத்திரசன்மன் ஆகியோரால் யுகங்கள் தோறும் சுயம்பு மூர்த்தியாக வழிபடப்பெற்ற நாகநாத சுவாமியை மகா சிவராத்திரியன்று நான்காம் யாமத்தில் நாகராஜன் வழிபட்டு தோஷம் நீங்கி முக்தி அடைந்ததாக தலவரலாறு கூறுகிறது. இதனால் இந்த கோவில் ராகு தோஷ பரிகார தலமாக விளங்குகிறது. இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் ராகு பெயர்ச்சி விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி சிறப்பு பரிகார பூஜை நடைபெற உள்ளது. முன்னதாக காலை 10 மணிக்கு அனுக்ஞை விக்னேஸ்வர பூஜையும், 11 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனையும் நடக்கிறது. அதனை தொடர்ந்து மதியம் 12.15 மணிக்கு கலசாபிஷேகமும், 12.30 மணிக்கு மகா தீபாராதனையும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் பரமானந்தம், செயல் அலுவலர் கோவிந்தராஜன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

அட்சயலிங்கசுவாமி கோவில்

இதேபோல், நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அமைந்துள்ள அட்சயலிங்க சுவாமி கோவிலின் உபகோவிலான அபிராமி அம்பிகை, சேஷபுரீஸ்வரர் கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) ராகு பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. விழாவையொட்டி முன்னதாக காலை 8.30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, 9 மணிக்கு மகா சங்கல்பம், 9.30 மணிக்கு கடஸ்தாபனம் பரிகார மகாயாகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. பின்னர் 11.30 மணிக்கு சேஷபுரீஸ்வரர், அபிராமி அம்மன், ஆதிசேஷன் மற்றும் நவக்கிரகங்களுக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. 12.15 மணிக்கு மகா பூர்ணாகுதி, கட அபிஷேகமும், 12.37 மணிக்கு மகா தீபாராதனையும், பிரசாதம் வழங்குதலும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ராணி, செயல் அலுவலர் ராஜராஜேஸ்வரன் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்

Leave a Reply