ஆங் சான் சூகிக்கு மியான்மர் அதிபரின் செய்தித் தொடர்பாளர் பதவி
மியான்மர் நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி அவர்களின் கட்சி மாபெரும் வெற்றி பெற்றது. ஆனால் அவருடைய கணவர் மற்றும் குழந்தைகள் வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருப்பதால் அவரால் அதிபர் பதவியை ஏற்க இயலவில்லை. இந்நிலையில் அவருடைய உதவியாளர் ஹிடின் கியா மியான்மர் நாட்டின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிலையில் ஆங் சான் சூகிக்கு அமைச்சர் பதவி அல்லது மதிப்பு மிகுந்த உயர்பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் அவர் அதிபரின் செய்தி தொடர்பாளராக பொறுப்பேற்பார் என கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆளும் தேசிய ஜனநாயகக் கட்சி செய்தித் தொடர்பாளர் வின் ஹிடெய்ன் என்பவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, “வெளியுறவு, அதிபர் அலுவலகம், கல்வி, எரிசக்தித் துறைகளுக்கான அமைச்சர் பதவிக்கு ஆங் சான் சூகியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கல்வி, எரிசக்தித் துறைகளுக்கான அமைச்சர் பதவிக்கு வேறு இரு பெயர்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. எனவே ஆங் சான் சூகி, அதிபரின் செய்தித் தொடர்பாளராகப் பொறுப்பு வகிப்பார்’ என்று கூறினார்.
ஏற்கெனவே, அதிபருக்கு இணையான அதிகாரத்தை ஆங் சான் சூகிக்கு அளிக்கும் விதமாக, சிறப்பு “ஆலோசகர்’ பதவியை உருவாக்குவதற்கான மசோதாவை தேசிய ஜனநாயகக் கட்சி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும், அதிபருக்கு இணையான அதிகாரத்தை உடைய இன்னொரு பதவியை உருவாக்குவது, மியான்மர் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று ராணுவ சார்பு எம்.பி.க்கள் அந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் தற்போது அவர் செய்தித்தொடர்பாளர் பதவியை ஏற்கவுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.