shadow

திடீரென யூடர்ன் போட்டு திரும்பிய ‘கியாண்ட்’ புயல். தீபாவளி அன்று தாக்குமா?

1வங்காள விரிகுடா கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி பர்மா கடற்கரை நோக்கி நகர்ந்த நிலையில் திடீரென ‘யுடர்ன்’ அடித்து தற்போது இந்தியாவை நோக்கி திரும்பியது. ‘கியான்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் ஒடிசா- ஆந்திரா கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதாகவும், நேற்று அதிகாலை 3 மணி அளவில் ஒடிசாவின் கோபால்பூர் நகரில் இருந்து தெற்கு மற்றும் தென் கிழக்கு திசையில் 710 கி.மீ. தொலைவிலும், ஆந்திராவின் விசாகப்பட்டினத்துக்கு கிழக்கே 850 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாகவும் வானிலை அறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.

இந்தப் புயல் தீபாவளி தினத்தில் சென்னையில் இருந்து 300 கி.மீ. தூரத்தில் உள்ள ஆந்திராவின் ஓங்கோலில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக புயல் எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது. ஆனாலும் இந்த புயல் விசாகப்பட்டினம் வழியே கரையை கடக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் இதன் காரணமாக ஆந்திரா, ஒடிசா கடற்பகுதியில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

தமிழகத்தை பொருத்தவரை இந்த புயலால் லேசான மழைக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் சென்னை துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் கடலூர், நாகையில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது

Leave a Reply