பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகளுக்கு 9 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் செய்ய பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று புதுடில்லியில் இருந்து கிளம்புகிறார். உள்கட்டமைப்பு, பாதுகாப்புத் துறை ஆகியவற்றில் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பது, அணுசக்தி ஒத்துழைப்பு போன்ற பல்வேறு திட்டங்கள் இந்த சுற்றுப்பயணத்தில் முக்கிய இடம் வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து வெளியுறவுத் துறை செயலர் எஸ்.ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
இன்று புதுடில்லியில் இருந்து கிளம்பும் பிரதமர் முதலில் பிரான்ஸ் நாட்டிற்கு சென்று அந்நாட்டு அதிபர் பிரான்சுவா ஹொலாந்துடன் பொருளாதாரம், பாதுகாப்பு, எரிசக்தித் துறை தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
அதன்பின்னர், பிரெஞ்சு தொழிலதிபர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் ஒன்றில் பங்கேற்கும் மோடி, பாதுகாப்பு தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் இருநாட்டு ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கிறார்.
நான்கு நாட்கள் பிரான்ஸில் பயணம் செய்யும் மோடியின் பயண திட்டத்தில் அதிபர் ஹொலாந்துடன் படகுப் பயணம் செய்யும் திட்டமும் உள்ளது. மேலும் முதலாம் உலகப்போர் நினைவிடத்தில், அப்போரில் உயிரிழந்த 10,000 இந்திய வீரர்களுக்கு மோடி அஞ்சலி செலுத்துவார் என்றும் கடைசியாக யுனெஸ்கோ தலைமையகத்துக்கும், பிரான்ஸ் விண்வெளி ஆய்வு மையத்துக்கும் பிரதமர் செல்லவுள்ளார்.
பிரான்ஸ் பயணத்தை முடித்த பின்னர் ஜெர்மனி செல்லும் பிரதமர் மோடி அங்கு வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்ந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள இருப்பதாக்வும், ஜெர்மனியில் இந்தியா நடத்தும் புகழ்பெற்ற ஹன்னோவர் தொழில் கண்காட்சியை மோடி பார்வையிடுகிறார்.
பின்னர், இந்திய-ஜெர்மனி வர்த்தக மாநாட்டில் உரையாற்றும் மோடி, இந்தியாவில் மேம்பாட்டுப் பணிகள் தொடர்பாக ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கலுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இறுதியாக கனடா நாட்டிற்கு பிரதமர் மோடி செல்கிறார். கடந்த 42 ஆண்டுகளில் கனடா செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பருடன் அணுசக்தி, வர்த்தகம், முதலீடு உள்ளிட்டவை தொடர்பாக பேச்சு நடத்துகிறார் என்றும் வெளியுறவுத்துறை செயலர் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.