shadow

பிரதமர் பதவியேற்ற பின் முதல்முறையாக இங்கிலாந்து செல்லும் பிரதமர் மோடி.
modi
சமீபத்தில் நடைபெற்று முடிந்த பீகார் தேர்தலில் பிரதமர் சூறாவளி சுற்றுப்பயணம் செய்தபோதிலும் தோல்வி அடைந்த நிலையில் இன்று பிரதமர் மோடி இங்கிலாந்து நாட்டுக்கு அரசுமுறை சுற்றுப்பயணமாக கிளம்பினார். பீகார் தோல்வியினால் பாஜக மூத்த தலைவர்களின் அதிருப்தியை சம்பாதித்துள்ள பிரதமர் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்து வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று இங்கிலாந்து நாட்டுக்கு புறப்பட்டு செல்லும் பிரதமருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு செய்ய முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது. லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ராணி 2-ம் எலிசபெத் அவர்கள் பிரதமர் மோடிக்கு மதிய விருந்து அளித்து கெளரவிக்கிறார்.

இந்த பயணத்தின்போது இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பிரதமர் மோடி, பின்னர் வெம்லே மைதானத்தில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பேசுகிறார். இதில் 60,000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பயணத்தின் போது இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைச்சர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். கேமரூனுடன் லண்டன் மற்றும் செக்கர்ஸ் நகரில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் கி.பி. 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்திய தத்துவஞானி பஸவேஸ்வரா மற்றும் அம்பேத்கர் ஆகியோர்  சிலைகளையும் லண்டனில் திறந்து வைக்கும் பிரதமர், இங்கிலாந்து பயணத்தின் இறுதி நிகழ்ச்சியாக சோலிஹில் பகுதியில் அமைந்துள்ள டாடா நிறுவனத்துக்கு சொந்தமான ஜாகுவார் கார் நிறுவனத்தையும்  பார்வையிடுகிறார்.

இங்கிலாந்து பயணத்தை முடித்த பின்னர், துருக்கித் தலைநகர் அங்காராவில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டில்  பிரதமர் மோடி பங்கேற்பார். நரேந்திர மோடி இந்திய பிரதமராக பொறுப்பேற்ற பின் பிரிட்டனுக்கு மேற்கொள்ளும் முதல் சுற்றுப்பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply